“சாப்டியானு கேட்க யாரும் இல்ல... அதனால இந்த உலகத்தையே சொந்தமாக்கிக்கிட்டேன்!”
21 வயசுக்கு மேல, அம்மா என்னோட கல்யாணம் பத்தி பேச ஆரம்பிச்சாங்க. ஆனா, எனக்குக் கல்யாணத்துல விருப்பம் இல்லனு சொல்லிட்டேன். அம்மாவும் அதுக்கப்புறம் என்னை வற்புறுத்தல.

“எனக்குனு ஒரு குடும்பம் இல்லங்க. ஆனா, நான் தனியா இருக்கிறேன்னு ஒரு நாளும் நினைச்சதில்ல. யாருக்கு உதவி தேவைப்படுதோ, அவங்க இருக்கிற இடம்தான் எனக்கு வீடு. அவங்கதான் என் குடும்பம். அதனாலதான், எவ்வளவு தூரமா இருந்தாலும், ஒரு சமூகப் பணி நடக்குதுனா என்னால முடிஞ்ச உதவியைச் செய்ய அங்கே போயிடுவேன். எனக்கு வேற என்னங்க வேணும்... நம்மால ஒருத்தருடைய வாழ்க்கையில ஒரு சின்ன நல்லது நடந்தாலே, அதுதான் எனக்கு சந்தோஷம்!” - நிதானமாகப் பேசுகிறார் லோகநாதன்.
ஈரோடு மாவட்டம், கதிரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். சமையல் வேலை செய்து வந்த தாயைக் கவனித்துக் கொள்ள, கிடைத்த வேலைகளையெல்லாம் செய்து வந்திருக்கிறார். 49 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத லோகநாதன், கடந்த 12 ஆண்டுகளாகத் தன் வாழ்க்கையை சமூகப் பணிகளுக்காக அர்ப்பணித்திருக்கிறார். சுற்றுச்சூழல் தூய்மை, மரக்கன்றுகள் நடுதல், சமூகப் பணிகள் என நல்ல செயல்கள் நடைபெறும் இடமெல்லாம் தன்னால் முடிந்த உதவியைச் செய்து வருகிறார். பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து, மக்களுக்குப் பயனளிக்கும் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். தன் வாழ்க்கை, சமூகப்பணி, பயணங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் லோகநாதன்.
“சின்ன வயசுல இருந்தே வறுமையில வளர்ந்த ஆளு நான். அப்பா தவறுனதுக்குப் பிறகு பள்ளிக்கூடம் போகல. அம்மா சமையல் வேலைக்குப் போவாங்க. அதனால நானும் அம்மாகூட வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். பிறகு விவசாயக் கூலி வேலைக்குப் போனேன். கிடைச்ச வேலையைச் செய்ய ஆரம்பிச்சேன். எங்க அம்மா சமையல் பண்ணின வீட்லயே எங்களுக்கு தங்க இடம் கொடுத்திருந்தாங்க.
21 வயசுக்கு மேல, அம்மா என்னோட கல்யாணம் பத்தி பேச ஆரம்பிச்சாங்க. ஆனா, எனக்குக் கல்யாணத்துல விருப்பம் இல்லனு சொல்லிட்டேன். அம்மாவும் அதுக்கப்புறம் என்னை வற்புறுத்தல. என்னோட வருமானத்துல என்னால முடிஞ்ச அளவுக்கு சின்னச் சின்ன உதவிகளைச் செய்ய ஆரம்பிச்சேன். அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமா சமூகப்பணியில எனக்கு ஆர்வம் வந்துச்சு” என்றவர் தான் செய்து வரும் சமூக சேவைகள் பற்றி பேச ஆரம்பித்தார்.
“செய்திகள்ல ‘லட்சங்கள்ல உதவி செஞ்சாங்க’, ‘உடலுறுப்பு தானம் செஞ்சாங்க’னு பார்க்கும்போது, `நாம செய்யுறதெல்லாம் ஒரு பெரிய சமூகப்பணி கிடையாது. ஒரு குடிமகனுக்கு இருக்க வேண்டிய கடமை’னு எனக்குத் தோணும். நான் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளரா வேலை செய்றேன். அந்த வேலைக்கும் எல்லா நாளும் கூப்பிட மாட்டாங்க. வேலை இல்லாத நாள்கள்ல வீடுகள்ல தண்ணீர் தொட்டி சுத்தம் பண்ற வேலைக்குப் போவேன். ராத்திரி வாட்ச்மேன் வேலை பார்ப்பேன். நான் சம்பாதிக்கிற காசுல என் சாப்பாட்டுக்குப் போக மீதிக்காசு எல்லாம் மத்தவங்களுக்குத்தான்” என்று சொன்னவர், சில நொடிகள் அமைதியாக இருந்தார். பிறகு, தன் வாழ்க்கையில் இருந்த ஒரே உறவைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.
“நான் என்ன வேலை செஞ்சாலும், வீட்டுக்கு வந்ததும் ‘சாப்டியா?’னு கேட்க எங்க அம்மா இருந்துச்சு. ஆனா, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அம்மா இறந்துடுச்சு. ‘சாப்டியா?’, ‘தூங்குனியா?’னு கேட்கக்கூட யாரும் இல்ல. அதனால, அந்த வீட்டைவிட்டு வெளியே வந்துட்டேன். இப்போ கிடைக்கிற இடத்துல தூங்கிக்கறேன். யாருமே இல்லாத எனக்கு, என்னைப் பார்க்கிறவங்க எல்லாருமே சொந்தம்தான். அதனால யாராவது என்கிட்ட உதவி கேட்டா, என்னால முடிஞ்சதைச் செஞ்சு கொடுத் துடுவேன்.
சுத்தம் செய்யுறதுதான் என்னோட வேலை. அதனால பேருந்து நிலையம், கோயில், பள்ளி வளாகம், கடற்கரைனு எங்கெல்லாம் சுத்தம் தேவைப்படுதோ, அதை என்னோட பொறுப்பா எடுத்துக்கிட்டேன். முதல்ல எனக்குத் தெரிஞ்ச இடங்கள்ல மட்டும் இதைப் பண்ணிட்டிருந்தேன். இப்போ சமூக வலைதளங்கள் மூலமா சமூக ஆர்வலர்களோட இணைஞ்சிருக்கேன். தூய்மைப் பணி, உழவாரப் பணி, பனைவிதை நடவு எதுவா இருந்தாலும், அழைப்பு வந்தா உடனே கிளம்பிருவேன். அவங்ககிட்ட போக்குவரத்துக்குக் காசோ, ஒரு டீக்குக் காசோ கூட நான் கேட்குறது கிடையாது. நான் சம்பாதிக்கிற பணத்துலதான் இதையெல்லாம் செஞ்சுக்கிறேன்.
சிலர், ‘நீ வாங்குற சம்பளத்துக்கு இதெல்லாம் தேவையா?’னு கேட்டுருக்காங்க. ஆனா, உதவிங்கிறது பணத்துல இல்ல... மனசுல இருக்குங்கிறத நான் தீர்க்கமா நம்புறேன். ஒருத்தருக்கு உதவி செய்யணும்னு நீங்க மனசார நினைங்க. அது தானா நடக்கும்” என்றவர் பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசம் செய்து கொள்கிறார்.
“அம்மா இல்லாத வீட்டைவிட்டு வெளிய வந்தப்போ, அநாதை மாதிரி இருந்துச்சு. ‘நமக்குனு யாருமே இல்லையே’னு தோணுச்சு. ஆனா, இன்னிக்கு நான் எங்க போனாலும், ஏதாவது ஒரு இடத்துல நான் உதவி செஞ்சவங்க இருக்காங்க. அவங்கள பார்க்கும்போது, ‘நமக்கும் சொந்தம் இருக்காங்க’னு தோணும். ‘எனக்கு என்ன கிடைக்கும்?’னு யோசிக்காம, ‘நம்மால என்ன செய்ய முடியும்?’னு யோசிச்சா போதும்... இந்த உலகமே நமக்கு சொந்தம்தான்”
தொடரட்டும் சேவைகள்!
