ஆண்டாள் கோயில் அறங்காவலர் பதவி 150க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
ஸ்ரீவில்லிபுத்துார், செப். 7 - ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் அறங்காவலர்கள் பதவிக்கு 150க்கும்
தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கீழ் 43 ஆயிரத்து 723 கோயில்கள் உள்ள நிலையில் பிரசித்தி பெற்ற மற்றும் அதிக வருவாய் உடைய 214 கோயில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமிக்க தற்போதைய தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஜூன் மாதம் வெளியிட்டது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், வைத்தியநாதர், ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி, திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள், சிவகாசி விஸ்வநாதர் கோயில்களுக்கு அறங்காவலர் நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
முதலில் ஜூலை 22க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆண்டாள் கோயிலில் ஒரு பெண் உட்பட 5 பேர் அறங்காவலராக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட இளம் வயது பட்டதாரிகள், பெண்கள், ஓய்வு அரசு அலுவலர்கள், முதியவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்து மதுரை இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, அரசு விதிகளின்படி தகுதி உள்ளவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
கடந்த தி.மு.க., அ.தி.மு.க ஆட்சி காலங்களில் அரசியல் பின்புலம் உள்ளவர்கள், தொழில் அதிபர்கள் மட்டுமே அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது அவ்விரு கட்சிகளை சேர்ந்தவர்களோ, தொழிலதிபர்களோ, ஆன்மீகவாதிகளோ விண்ணப்பிக்கவில்லை.
த.வெ.க. ஆதரவாளர்கள் ஒரு சிலரும், மாத சம்பளப் பணி என கருதி பல பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளனர்.