Lifestyle and human interest
15 நாட்களாக சிக்காமல் போக்குக் காட்டும் ஆட்கொல்லி புலி! உயிர் அச்சத்தில் கூடலூர் மக்கள்

கூடலூரில் 15 நாட்களாக ஆட்கொல்லி புலி சிக்கவில்லை.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஓவேலி லாரஸ்டன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஒருவரையும், 21 ஆம் தேதி ஒருவர் என இரண்டு பேரை புலி தாக்கி கொன்றது. இந்த சம்பவம் கூடலூர் பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி முதல் இன்று வரை 14 நாட்களாக 150 க்கும் மேற்பட்ட வனத்துறையினர், 147 தானியங்கி கேமராக்களை பொருத்தி இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் மனிதர்களை தாக்கிக் கொன்ற புலியை பல்வேறு பகுதிகளில் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை தானியங்கி கேமராக்களிலும் ட்ரோன் கேமரா தேடுதலிலும் புலி இதுவரை சிக்கவில்லை.
இதனால் புலியை தேடி பிடிப்பதில் வனத்துறையினருக்கு ஒவ்வொரு நாளும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக புலி நடமாடியதாக கருதப்படும் பகுதி உயரமான மலை மற்றும் செங்குத்தான கரடு முரடான பாதைகள் நிறைந்த வனப்பகுதிகளாக உள்ள சவாலான இடங்களில் 15 வது நாளாக வனத்துறையினர் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மலையின் நடுவே செங்குத்தான பள்ளத்தாக்கில் உயிரை பணயம் வைத்து வனத்துறையினர் குகைப் பகுதியிலும், அடர்ந்த புதர் செடிகள் நிறைந்த பகுதியிலும் தேடுதல் பணியை தீவிரமாக தொடர்ந்து வருகின்றனர். இதுவரை புலி தென்படவில்லை என்பதால் கிராம மக்களும் மிகுந்த அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.

