பகிங்ஹாம் கால்வாயில் ரூ.10 கோடியில் தடுப்பு சுவர்
அடையாறு: பகிங்ஹாம் கால்வாயில், வலுவிழந்த தடுப்பு சுவரை அகற்றி, 10 கோடி ரூபாயில் புதிய சுவர் கட்டப்பட உள்ளது.
கோட்டூர்புரம் மற்றும் மத்திய கைலாஷ் மேம்பால ரயில் நிலையங்கள் இடையே உள்ள பகிங்ஹாம் கால்வாயின் கிழக்கு திசை தடுப்பு சுவர், வலுவிழந்து உள்ளது.
கனமழை தொடர்ந்து பெய்து கால்வாயில் வெள்ள நீரோட்டம் அதிகரிக்கும்போது, சுவர் உடைந்து, கெனால் பேங்க் சாலை, காந்தி நகர், கோட்டூர்புரம் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால், வலுவிழந்த பகுதியில் தடுப்பு சுவரை இடித்து அகற்றி புதிதாக சுவர் கட்ட, நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.
கோட்டூர்புரம் ரயில் நிலையத்தில் இருந்து, தெற்கு திசை நோக்கி, 620 மீட்டர் நீளம், 5 மீட்டர் உயரத்தில், 10 கோடி ரூபாயில் இந்த சுவர் கட்டப்பட உள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.