பிரச்னையும் தீர்வும்.... இலவச சேலை உற்பத்தியில் அளவு மாற்றத்தால் வேலை இழப்பு கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு தொழில் நெருக்கடியால் அவதி
ஆண்டிபட்டி, செப். 6- அரசின் இலவச சேலைகள் உற்பத்தி திட்டத்தில் சேலைகளின் தர அளவுகள் மாற்றத்திற்கு ஏற்ப தறிகளை
அரசின் இலவச சேலைகள் உற்பத்தி திட்டத்தில் சேலைகளின் தர அளவுகள் மாற்றத்திற்கு ஏற்ப தறிகளை மாற்றம் செய்ய முடியாததால் மாவட்டத்தில் கைத்தறி கூட்டுறவு சங்க நெசவாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.
மதுரை கைத்தறி சரகத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் 5 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலம் இந்த ஆண்டு இலவச சேலை உற்பத்தியில் 48 ஆயிரம் சேலைகள் பெடல்ரக தறிகளிலும், 2 ஆயிரம் சேலைகள் கைத்தறிகளிலும் உற்பத்தி செய்வதற்கு திட்ட குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 40 ம் நம்பர் நூல் வழங்கப்பட்டு உள்ளூர் தொழிலாளர்கள் மூலம் சாயம், பசை ஏற்றப்பட்டு, ராட்டை இயந்திரம் மூலம் பாவு ரோலாக மாற்றம் செய்து சேலை உற்பத்தி செய்தனர். பாலியெஸ்டர் கோன் ஊடை நூலாக வழங்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக இப்பகுதி நெசவாளர்கள் இதனை தொடர்ந்தனர். இந்த ஆண்டு, ரகம் மற்றும் தர அளவுகள் மாற்றம் என்ற பெயரில் நெசவாளர்களுக்கு நேரடியாக நூல் வழங்காமல் வெளியூர்களில் இயங்கும் சைசிங் ஆலைகள் மூலம் பாவு உற்பத்தி செய்து வழங்குகின்றனர். சைசிங் ஆலைகளில் உற்பத்தி செய்து அனுப்பப்படும் பாவு ரோலுக்கு ஏற்ப இப்பகுதி தறிகளை மாற்றம் செய்ய வேண்டி உள்ளது. ஏற்கனவே கடந்த மூன்று மாதமாக உற்பத்தி திட்டம் இன்றி வேலை நடைபெறவில்லை. இந்நிலையில் தறி மாற்றம் செய்ய முடியாமல் மீண்டும் வேலை இழப்பை சந்திக்கின்றனர். நெசவாளர்கள் கூறியதாவது;
மீனாட்சி சக்கம்பட்டி: கடந்த 60 ஆண்டாக கைத்தறி தொழில் செய்கிறேன். 30 ஆண்டுக்கும் மேலாக இலவச சேலை உற்பத்தி செய்கிறேன். தொழிலில் இது போன்ற நெருக்கடி இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. இரண்டு மாதமாக வேலை இல்லை. நூல் எப்போது கிடைக்கும் என்று கூட்டுறவு சங்க அதிகாரிக்கே தெரியவில்லை. எனக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தாலும் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் வேலை செய்து பிழைத்து வருகிறேன். வாரம் ஐந்து சேலை உற்பத்தி செய்ய முடியும். சேலை ஒன்றுக்கு பிடித்தம் போக ரூ.150 கூலியாக கிடைக்கும். ரகம், தறிகளை மாற்றம் செய்தால் என் போன்ற வயதானவர்கள் எப்படி இந்த வேலையை செய்ய முடியும்.
வேலை இழப்பு பாதிப்பு பாப்பா, சக்கம்பட்டி: கூட்டுறவு சங்கம் மூலம் 40 ஆண்டுகளாக இலவச சேலை உற்பத்தி செய்து வருகிறேன். திடீரென்று ரகம் மாற்றுவதால் என் போன்ற வயதானவர்களுக்கு வேலை இழப்பு பாதிப்பு ஏற்படும். இந்த தொழிலை விட்டால் வேறு தொழில் எங்களுக்கு தெரியாது. கைத்தறிகளில் ஏற்கனவே இருந்த ரகங்களே மீண்டும் தொடர வேண்டும். ரக மாற்றத்தினால் பசை ஏற்றுதல், பாவு ஓடுதல், நூல் சுற்றுதல் போன்ற உப தொழில்களில் உள்ள பலருக்கும் வேலை இழப்பு ஏற்படும்.
சங்கரேஸ்வரன், அண்ணா தொழிற்சங்க செயலாளர்: ரக மாற்றத்தில் 60ம் நம்பர் நைஸ் ரகநூல் பயன்படுத்தப்படுகிறது. சேலைகளில் ஜரிகை பாலியெஸ்ப் பார்டர் அமைக்க வேண்டும். தறிகள் சீரமைக்க ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். ஏற்கனவே வேலை இழப்பால் தவிக்கும் நெசவாளர்களுக்கு இது பெரும் சுமையாக உள்ளது. புதிய ரகத்திற்கு கூலி நிர்ணயமும் இல்லை.
சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் இலவச சேலைகள் உற்பத்தியை நம்பியே பலரின் வாழ்வாதாரம் உள்ளது. வயதான நெசவாளர்கள் புதிய ரக மாற்றத்திற்கு தங்களை தயார் படுத்துவது இயலாத காரியமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி செய்த சேலைகளுக்கு கூலி பட்டுவாடா அவ்வப்போது கொடுக்கவில்லை. ரொக்க முன் பணமும் கொடுக்கவில்லை. நெசவு கூலியை போராடியே பெற்று வந்தனர். ரக மாற்றம் நெசவாளர்களுக்கு மீண்டும் நெருக்கடி தருகிறது. மாநில அரசு மூலம் செயல்படுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டை ரத்து செய்து விட்டதால் நெசவாளர் காப்பீடு அட்டைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியவில்லை. கூட்டுறவு நெசவாளர்கள் நலனில் அரசு அக்கறை செலுத்த வேண்டும்.
ரக மாற்றத்தில் சலுகை தேவை தீர்வு: தற்போதுள்ள இளைய தலைமுறையினர் யாரும் கைத்தறி, பெடல் தறிகளில் வேலை செய்வதில்லை. வேலை செய்தால் மட்டுமே வாழ்வாதாரம் என்ற நிலையில் 50 வயதை கடந்த கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். ரக மாற்றத்தால் சேலைகளுக்கான அரசு கொள்முதல் அடக்க விலையும் அதிகமாகும். அச்சு, தறிகள் மாற்றம் செய்ய தொழில் நுட்பம் சார்ந்தவர்களும் குறைவாகவே உள்ளனர். மிகக் குறைவான எண்ணிக்கையில் அழியும் நிலையில் உள்ள கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் காக்க ரக மாற்றத்தில் சலுகைகளை நெசவாளர்கள் அரசிடம் எதிர்பார்க்கின்றனர்.