Politics
”அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார் நரேந்திர மோடி”; - ராகுல்காந்தி விளாசல்

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இணைய வழி பரிவர்த்தனைக்குக் கட்டணம் வசூலிக்கும் வகையிலான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து, ராகுல்காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், ”யுபிஐ பரிவர்த்தனைகள் மீது கட்டணம் விதிப்பதற்கான கதவை நரேந்திர மோடி அரசு மறைமுகமாகத் திறந்துவிட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து, அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், “இனி ரூ.2,000க்கு மேற்பட்ட வணிகர் யுபிஐ பரிவர்த்தனைகள் மீது வணிகர் தள்ளுபடி விகிதம் கட்டணம் விதிக்கப்படலாம். இத்தகைய பரிவர்த்தனைகள் மொத்த பரிவர்த்தனை எண்ணிக்கையில் 5% மட்டுமே என்றாலும், யுபிஐ யின் மொத்த பரிவர்த்தனை மதிப்பில் இவை ஏறக்குறைய 65% பங்கைக் கொண்டுள்ளன.
வாடிக்கையாளர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அரசு கூறுகிறது. ஆனால், கடைக்காரர்கள் மீது விதிக்கப்படும் இந்தக் கட்டணங்கள் இறுதியில் எங்கிருந்து வரும்? அவை பொருட்களின் விலையில் சேர்க்கப்பட்டு, நேரடியாக வாடிக்கையாளர்களின் பையிலிருந்தே வசூலிக்கப்படும்.
இந்தியாவின் 'பூஜ்ஜிய எம்டிஆர்' கொள்கையை அமெரிக்கப் பணப் பரிவர்த்தனை நிறுவனங்கள் நீண்ட காலமாக எதிர்த்து வருகின்றன. இப்போது, அதே திசையில் கொள்கையை மாற்றுவதற்கான வழியை நரேந்திர மோடி அரசு திறந்துவிட்டுள்ளது. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின்போது நடந்தது போலவே, அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை பணிந்து சரணடைந்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


