Politics
UPI-க்கு கட்டணம்.. அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பிரதமர் மோடி அடிபணிந்தார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதித்தது அமெரிக்காவின் அழுத்தத்தால் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு. மோடி அரசு மறுப்பு, யுபிஐ கட்டமைப்பை வலுப்படுத்தவே இந்த முடிவு என விளக்கம்.
யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்பட்டதன் மூலம், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பிரதமர் மோடி அடிபணிந்து விட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல், UPI மூலம் வணிகரீதியாக 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால், வர்த்தகர்களிடமிருந்து பூஜ்ஜியம் புள்ளி 4 விழுக்காடு கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, டிரம்ப்பின் அழுத்தத்திற்கு பிரதமர் மோடி அடிபணிந்து விட்டதாக குற்றம்சாட்டினார். யுபிஐ பரிவர்த்தனைக்கு வரி விதிப்பதன் மூலம் அமெரிக்காவிற்கு பெருந்தொகையை வழங்க இருப்பதாக விமர்சித்துள்ளார். எனவே, ஒவ்வொரு இந்தியர் மீதும் பிரதமர் மோடி சுமத்தியுள்ள யுபிஐ வரியை திரும்பப் பெற வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே UPI பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய MDR கட்டணத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. UPI கட்டமைப்பை வலுப்படுத்தவும், அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு யுபிஐ முறை அறிமுகம் செய்யப்பட்டபோது எம்டிஆர் கட்டணம் வசூலிக்ககப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய MDR நடைமுறை மூலம் UPI அமைப்பை தற்சார்புடையதாக மாற்ற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. பூஜ்ஜிய MDR நடைமுறை காரணமாக அரசின் நிதிச்சுமை அதிகரிப்பதாக நாடாளுமன்ற நிதிக்குழு ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த நிலையில், UPI அமைப்பின் நீண்டகால நிதி நிலைத்தன்மையை உறுதி செய்ய வருவாய் வழிமுறை அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.
கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் UPI பயன்பாட்டை விரிவுபடுத்த ஊக்கத்தொகைகள் வழங்கப்படும் என்றும், பெரும்பாலான பரிவர்த்தனைகள் தொடர்ந்து கட்டணமின்றி இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே தனிநபர்களுக்கு இடையேயான பணப் பரிமாற்றங்களுக்கும், சிறிய தொகையிலான UPI பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் இல்லை என நிதியமைச்சகம் தெளிவுபடுத்தி இருந்தது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
