ஆரோவில்லில் கட்டப்பட்ட அருங்காட்சியகம் புதுச்சேரி அரசு அதிகாரிகள் ஆய்வு

வானுார்: மகான் அரவிந்தரின், 150 வது பிறந்த நாளையொட்டி அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மெய் நிகர் அருங்காட்சியக கட்டடத்தை புதுச்சேரி அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சர்வதேச நகரமான ஆரோவிலில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவியின் முன்னெடுப்பில், பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மகான் அரவிந்தரின் கடந்த, 150வது பிறந்த நாளையொட்டி, ஆரோவில் அறக்கட்டளை, புதுச்சேரி அரசு மற்றும் மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கூட்டு முயற்சியில், மத்திய பொதுப்பணித்துறை மூலம் புதியதாக அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மெய்நிகர் அருங்காட்சியக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த மெய்நிகர் அருங்காட்சியகத்தை, புதுச்சேரி தலைமை செயலாளர் சரத் சவுகான், அரசு செயலாளர் முத்தம்மா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அவர்களுக்கு, ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு பணி அலுவலர் சீத்தராமன், மூத்த ஆலோசகர் வேணுகோபால் ஆகியோர் அருங்காட்சியகத்தில் உள்ள சிறப்புக்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
அப்போது, அருங்காட்சியகத்தில், ஊடாடும் மின் கற்றல், அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு, தத்துவங்கள் மற்றும் ஒருங்கிணைந்த யோகத்தை பார்வையார்கள் எளிதாக கற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நவீன தொடுதிரை தளங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
மேலும், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த, 12 மலர்களின் பிரத்யேக நறுமணத்தை நேரடியாக உணரும் வசதி ஏற்படுத்தி இருப்பது குறித்தும், பார்வையாளர்கள் திரைகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டு தகவல்களை பெறும் அதிநவீன தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
ஆரோவில் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், ஆன்மீக ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள், அரவிந்தரின் சிந்தனைகளை எளிதில் உணர்ந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மெய்நிகர் அருங்காட்சியகம் விரைவில் பொது மக்களின் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது என ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.