பிரேக் இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களால் விபத்து அறிக்கை சமர்ப்பிக்க, சான்று சரிபார்க்க பணிச்சுமை

விருதுநகர்: மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பிரேக் இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களால் விபத்து அறிக்கை சமர்ப்பிக்க, சான்று சரிபார்க்க பணிச்சுமை அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து எல்லைகள் விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார் என பிரிக்கப்பட்டுள்ளன. இதில் அருப்புக்கோட்டை, ராஜபாளையத்தில் யூனிட் அலுவலகங்கள் வைக்கப்பட்டு அருப்புக்கோட்டை விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலும், ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டிலும் இயங்கி வருகிறது.
டிரைவிங் லைசென்ஸ், எப்.சி., உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பிரேக் இன்ஸ்பெக்டர் கிரேடு 1 பணியிடத்தில் பணிபுரிவோர் தான் 304ஏ எனும் உயிரிழப்பு விபத்துக்களில் வாகனங்களை ஆய்வு செய்து மோட்டார் வாகன அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பர்.
பிரேக் இன்ஸ்பெக்டர் கிரேடு 2 பணி என்பது பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள், டாக்ஸிகளை மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததா என ஆய்வு செய்து எப்.சி., வழங்குவதும், அவற்றின் பிரேக் தரங்களை ஆய்வு செய்வதும் ஆகும்.
இந்நிலையில் விருதுநகரில் கிரேடு 1 பணியிடம் காலியாக உள்ளது. இதை வட்டார போக்குவரத்து அலுவலரே கூடுதல் பொறுப்பு பார்க்கிறார். கிரேடு 2 தற்போது பயிற்சியில் உள்ளார். இதே போல் ஸ்ரீவில்லிபுத்துாரில் கிரேடு 1, 2 ஆகிய இரு பணியிடங்களும் காலியாக உள்ளது. சிவகாசியில் மட்டும் தான் கிரேடு 1, 2 பணியிடங்களில் அதிகாரிகள் பணியில் உள்ளனர். இதில் கிரேடு 2 பயிற்சிக்கு சென்று இம்மாதம் திரும்புகிறார்.
இவர்கள் தான் மற்ற போக்குவரத்து அலுவலகங்களுக்கு கூடுதல் பொறுப்பாக ஒவ்வொரு வாரமும் சென்று வருகின்றனர். இந்நிலையில் கூடுதல் பணியிடங்களால் மக்களுக்கு சான்றுகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது. அறிக்கைகள் சமர்ப்பிப்பதில் பணிச்சுமை ஏற்படுகிறது. மாவட்டத்தில் தினசரி 10க்கும் மேற்பட்ட விபத்துக்கள் பெரிய அளவிலும், சிறிய அளவில் 20க்கும் மேற்பட்ட விபத்துக்களும் நடக்கின்றன. இந்நிலையில் பிரேக் இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது.
எனவே மாவட்டத்தில் உள்ள 2 வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.