Science and technology
இன்றே பணிக்கு கடைசி நாள்: இமெயிலில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆரக்கிள் நிறுவனம்

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் தனது செலவுகளைக் குறைக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊழியர்களுக்குப் பணிநீக்க மின்னஞ்சல்களை அனுப்பியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்று ஆரக்கிள். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம், தனது செலவினங்களைக் குறைக்கவும் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை விரிவுபடுத்தவும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், சமீப காலமாக பணி நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில், நேற்று அதிகாலை 6 மணி அளவில் ஊழியர்களுக்கு ஆரக்கிள் நிறுவனம் அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஊழியர்கள் பலருக்கும் அதிகாலை சென்ற இ மெயிலில், “இன்று உங்களுடைய கடைசி வேலை நாளாகும். நிறுவனத்தின் தற்போதைய தொழில் தேவைகள் மற்றும் அமைப்பு ரீதியான மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, உங்களுடைய பணியிடம் நீக்கப்படுகிறது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இமெயில் வந்த சில நிமிடங்களிலேயே ஊழியர்களின் அலுவலக இமெயில், விபிஎன் மற்றும் நிறுவனத்தின் லேப்டாப் அணுகல் என அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஆரக்கிள் நிறுவனத்தின் இந்த முடிவு உலகம் முழுவதும் உள்ள ஐடி துறையை சேர்ந்தவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ அபரிமிதமான வளர்ச்சியால், முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு செய்து வருவது ஊழியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.