போஸ்டர் கும்மிடி அரசு பள்ளியில் ‘குஸ்தி’ மாணவியர் 8 பேர் ‘சஸ்பெண்ட்’
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அரசு பள்ளியில், கோஷ்டி மோதலில் ஈடுபட்ட எட்டு மாணவியர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டு உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வாலிபர் ஒருவரை காதலிப்பது தொடர்பாக, கடந்த வாரம் மாணவியர் இடையே தகராறு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில், இரு கோஷ்டிகளாக பிரிந்த மாணவியர், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
தகவலறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், இருதரப்பு மாணவியரையும் அழைத்து, சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சென்ற மாணவியர், திங்கட்கிழமை பள்ளி திறந்ததும் மீண்டும் மோதி கொண்டனர்.
ஒரு கட்டத்தில், மாணவியரை சமாளிக்க முடியாததால், பெற்றோரை அழைத்து வரும்படி, பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. மறுநாள் பெற்றோருடன் பள்ளி மாணவியர் சென்றனர்.
மாவட்ட கல்வி அலுவலர் அய்யப்பன், தலைமை ஆசிரியர் லதா ஆகியோர் விசாரணை நடத்தி, மாணவியரை சமரசம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, மாணவியர் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, கோஷ்டி மோதலாக மாறியது. இதை பார்த்த பெற்றோரும், பள்ளியிலேயே ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். தகவலறிந்து சென்ற போலீசார், அனைவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
மாணவியர் மற்றும் பெற்றோர் மோதி கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, பிரச்னைக்கு காரணமான பிளஸ் 2 மாணவியர் எட்டு பேரை, பள்ளி நிர்வாகம், ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளது.