'பரிகாரப் போர்வையில் கிளி ஜோசியரின் ஆ@பாச வலை; கனடா தமிழ் பெண்ணுக்கு பெசன் நகர் பீச்சில் நேர்ந்த கொடூரம்!

தமிழைப் பூர்வீகமாகக் கொண்டு கனடாவில் வசித்து வரும் 29 வயது இளம் பெண் ஒருவர், சென்னையில் உள்ள ஒரு முன்னணித் தொலைக்காட்சியின் இசைப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கடந்த ஜனவரி மாதம் தனது தாயாருடன் சென்னை வந்துள்ளார். அவர் சென்னையில் தங்கிப் பாட்டுப் பயிற்சி பெற்று வந்த நிலையில், ஒரு மாதத்தில் அவரது தாயார் மட்டும் மீண்டும் கனடா திரும்பியுள்ளார்.
தனிமையில் வசித்து வந்த அந்தப் பெண் ரிலாக்ஸ் செய்ய கடந்த பிப்ரவரி மாதம் பெசன் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்குக் கிளிஜோசியம் பார்த்துக் கொண்டிருந்த சின்ன இசக்கிமுத்து குருசாமி என்பவரிடம் ஜோதிடம் பார்த்துள்ளார். அந்தப் பெண்ணின் தாயாருக்குப் புற்றுநோய் உள்ளது என்பது உள்ளிட்ட கடந்த காலத் துல்லியமான விபரங்களை அந்த ஜோசியர் கூறவே, அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அவரை நம்பி 70,000 பணத்தை ஜிபே மூலம் அனுப்பியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக அந்தப் பெண் தற்காலிகமாக கனடா சென்றிருந்தபோது, அவரது மொபைல் எண்ணுக்குத் தொடர்பு கொண்ட கிளிஜோசியர் சின்ன இசக்கிமுத்து, "உனது தாயின் உடலில் கடுமையான நச்சுக்களும், கெட்ட சக்திகளும் புகுந்துள்ளன. அது உனது உடலிலும் பரவாமல் இருக்க வேண்டும் என்றால் உடனடியாகப் பரிகாரம் செய்ய வேண்டும், இல்லையெனில் உயிருக்கே ஆபத்து" என்று கூறி அந்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், "நீ சென்னையில் இல்லை என்றாலும் பரவாயில்லை, உனது நிர்@வாணப் புகைப்படங்களை எனக்கு அனுப்பு, அதைவைத்து நான் இங்குப் பரிகாரம் செய்கிறேன், உடனே வீடியோ காலிலும் வா" என்று மூளைச்சலவை செய்துள்ளார். பயந்துபோன அந்தப் பெண்ணும் தனது ஆபாசப் படங்களை அனுப்பியதுடன், வீடியோ காலிலும் நிர்@வாணமாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதற்காக மேலும் 20,000 ரூபாய் பணத்தையும் அந்த ஜோசியருக்குப் பறிமாற்றம் செய்துள்ளார்.
அண்மையில் பாட்டுப் போட்டியின் அடுத்தகட்ட அழைப்பு வந்ததால் அந்தப் பெண் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். அவர் சென்னை வந்ததை அறிந்த கிளிஜோசியர், தன்னிடம் உள்ள ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோ கால் பதிவுகளைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உனது எதிர்காலத்தையே பாழாக்கிவிடுவேன் என்று மிரட்டி, சில லட்சங்கள் பணம் கேட்டுத் தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்தப் பெண் டி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து, 48 வயதான போலி கிளிஜோசியர் சின்ன இசக்கி முத்து குருசாமியைக் கைது செய்து அவரிடமிருந்த மொபைல் போனைப் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் தென்காசி மாவட்டம் இடைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. பரிகாரம் என்ற பெயரால் வெளிநாட்டுப் பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடிய இந்த போலி சாமியாரின் நெட்வொர்க்கில் வேறு ஏதேனும் இளம் பெண்கள் சிக்கிப் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)