Crime, law and justice
தென் தமிழகத்தை அலறவிட்ட வடமாநில கும்பல்; ம.பி. வரை சென்று தூக்கிய காவல்துறை

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பிலிப்ஸ் காலனியை சேர்ந்தவர் 59 வயதான ஜூலியட் லதா. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜஸ்டின் சகாயராஜ். இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருந்த தங்கள் மகனின் திருமணத்தில் பங்கேற்பதற்க்காக நகைகளுடன் ஆகஸ்ட் 27 ஆம் தேதி இரவு திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
திருநெல்வேலி - கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு டோல்கேட் அடுத்துள்ள ஹோட்டல் ஒன்றில் ஆம்னி பேருந்து இரவு 8 மணியளவில் நிறுத்தப்பட்டது. அப்போது அந்த ஆம்னி பேருந்தில் இருந்து ஜூலியட் லதாவும், அவரது கணவர் ஜஸ்டின் சகாயராஜூம் இறங்கி பாத் ரூமுக்கு சென்றுள்ளனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ஹேண்ட் பேக் திறந்து கிடந்ததை கண்டு ஜூலியட் லதா அதிர்ச்சி அடைந்தார். அந்த ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த 41 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான போலீசார் அந்த ஹோட்டலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆம்னி பேருந்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரின் விவரங்களை கைப்பற்றி விசாரணையை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரப்படுத்தினர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க,
கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், ஏ.எஸ்.பி. நீல் சர்மா ஐபிஎஸ், இன்ஸ்பெக்டர்கள் வானமாமலை, ராமச்சந்திரன், போலீசார் செல்லத்துரை, கார்த்திக் ராஜா, ராமகிருஷ்ணன், சரவணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து தூத்துக்குடி எஸ்.பி சிவப்பிரசாத் உத்தரவிட்டார்.
சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த சந்தேகப்படும்படியான கொள்ளையனின் போட்டோவை க்ரைம் வாட்ஸ் அப் குரூப்களில் தனிப்படை போலீசார் பதிவிட்ட போது அதே நபர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆம்னி பேருந்துகளில் நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்து இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து டிஜிட்டல் தொழில் நுட்ப ரீதியாக துப்பு துலக்கியதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் என்பதை தனிப்படை போலீசார் உறுதிப்படுத்தினர். பின்னர் மத்திய பிரதேச மாநில ஐ.பி.எஸ் அதிகாரிகளை, தூத்துக்குடி எஸ்.பி. சிவப்பிரசாத் தொடர்பு கொண்டு பேசியதை தொடர்ந்து அங்கு விரைந்த கோவில்பட்டி போலீசார் தார் மாவட்டத்தில் முகாமிட்டு கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 35 வயதான மக்ஸூத் கான் என்பவனை சுற்றி வளைத்து கைது செய்து அவனிடமிருந்து 41 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மத்திய பிரதேசத்தை சேர்ந்த கார்டு மைதீன் கான், ராபிக் ஆகிய இருவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இது குறித்து விசாரணையின் போக்கை அறிந்த போலீஸ் அதிகாரி ஒருவர் நக்கீரனிடம் கூறுகையில்... ”மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு கொள்ளை கும்பல் தமிழகத்தில் ஊடுருவி உள்ளது. இவர்கள் நெடுஞ்சாலைகளில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படும் ஹோட்டல்கள் எது எது என ஒரு லிஸ்ட் எடுத்து வைத்துக்கொண்டு அங்கே ஒரு கும்பலாக சென்று பின்னர் தனித்தனியாக பிரிந்து சிலர் வேவு பார்ப்பார்கள். அதில் ஒருவர் மட்டும், ஹோட்டல்களில் ஆம்னி பேருந்து நிறுத்தப்பட்டதும் எந்த ஆம்னி பேருந்துகளில் இருந்து டிரைவர் கிளீனர் இறங்கி செல்கிறார்களோ அந்தப் பேருந்துக்குள் ஏறிச் சென்று பெண்களின் ஹேண்ட் பேக்குகளை, டிராவல் பேக்குகளை மட்டும் குறி வைத்து திறந்து பார்த்து அதில் இருக்கும் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு ஐந்து நிமிடத்தில் இறங்கி சென்று கூட்டாளிகளிடம் பொருளை கைமாற்றி விட்டு எஸ்கேப் ஆகி விடுவார். மற்றவர்கள் சிறிது நேர இடைவெளியில் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகி விடுவார்கள்.
பொதுவாகவே தமிழ்நாட்டு பெண்கள் அனைவருமே பயணத்தில் இருக்கும் போதும், தூங்கும் நேரத்திலும் தாங்கள் அணிந்திருக்கக் கூடிய தங்க ஆபரண நகைகளை கழற்றி ஹேண்ட் பேக்கில் வைப்பதையும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அதை அணிவிப்பதையும் பழக்க வழக்கமாக வைத்திருப்பதை நுட்பமாக தெரிந்து கொண்டு இந்த மத்திய பிரதேச கொள்ளை கும்பல் ஆம்னி பேருந்துகளிலும்... ஹேன்ட் பேக்குகளிலும் கைவரிசை காட்டி வந்துள்ளது. இவர்கள் கடந்த ஒரு மாதத்தில் ஒட்டன்சத்திரம், உசிலம்பட்டி, அரவக்குறிச்சி, உடுமலைப்பேட்டை, கோவில்பட்டி, கயத்தாறு ஆகிய இடங்களில் ஆம்னி பேருந்துகளில் ஏறி மொத்தம் 128 சவரன் தங்க நகைகள் மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதில் தற்போது கோவில்பட்டி அருகே ஆம்னி பேரூந்தில் கல்லூரி பேரசிரியையிடம் களவு போன 41 சவரன் நகை மட்டும் போலீஸாரால் மீட்கப்பட்டு ஒருவனை கைது செய்துள்ளனர்” என்றார்.
ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை பெரிய கொள்ளையாக இருக்கிறதே என பயணிகளின் புலம்பல்கள் ஒருபுறம் ஒலிக்க, மத்திய பிரதேச கொள்ளை கும்பலின் ஊடுருவல், கைவரிசை என இன்னொரு புறம் அரங்கேறும் சம்பவங்கள் பயணிகளை அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
