போலந்து வேலையை துாக்கி எறிந்தார் குப்பனுார் நிலத்தை குத்தகைக்கு எடுத்தார்!

இந்த தொழில்நுட்ப யுகத்தில் விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்கள் குறைவு. அதுவும், வெளிநாட்டில் ரூ.3 லட்சம் சம்பளத்தில் வேலை பார்த்து வந்த 36 வயது இளைஞர், அந்த வேலையை உதறி விட்டு இயற்கை விவசாயத்தில் அசத்தி வருவது பெரிய விஷயம்தானே!
மாதம்பட்டி அருகே உள்ள குப்பனூர் பகுதியை சேர்ந்தவர் இவர். பெயர் விஜயன். சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேட்டூர். எம்.டெக் படித்துவிட்டு போலந்தில் வேலை பார்த்து வந்த இவர், இயற்கை விவசாயி ஆக மாறி கலக்கி வருகிறார்.
''பள்ளி காலத்தில் இருந்தே விவசாயம் என்றால் பிடிக்கும். இன்று விவசாயிகள் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். அதில் மாற்றம் கொண்டு வர விரும்பி வேலையை ராஜினாமா செய்து, 2021ம் ஆண்டு முதல் இயற்கை விவசாயம் செய்கிறேன்.
இதற்காக 20 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளேன். தக்காளி, கத்தரி, பீர்க்கன், புடலை, பூசணி, முட்டைகோஸ் உள்ளிட்ட 12 வகையான காய்கறி, சிவப்பு தண்டு, பச்சை தண்டு, பொன்னாங்கண்ணி, பாலக்கீரை, சிறுகுரை, முருங்கை உள்ளிட்ட 10 வகையான கீரை...என, மாதம் 30 டன் காய்கறி சாகுபடி செய்கிறேன்'' என்கிறார் விஜயன்.
யாருக்கு விற்பனை செய்கிறீர்கள் என கேட்டதற்கு, ''ஈஷா யோக மையத்தில் அதிக காய்கறி வாங்குகிறார்கள். இயற்கை அங்காடிகளுக்கும் விற்கிறேன். 140 வாடிக்கையாளர்கள் நேரடி தொடர்பில் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து வாட்ஸ்அப் குழு வைத்துள்ளேன். காய்கறி தொடர்பான விபரங்களை குழுவில் பதிவு செய்வோம். ஞாயிறுகளில் வீட்டுக்கு டெலிவரி செய்வோம்'' என்றார்.
கடல் தாண்டியும் கலக்குகிறார் விஜயன். பாவைக்காயை பவுடராக்கி ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்கிறார். முட்டைகோஸ், பீட்ரூட், பேபி கார்னை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்.
''இந்தியா முழுவதும் பயணித்து நல்ல தொழில்நுட்பங்களை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். விவசாயிகள் செலவை குறைத்து, உற்பத்தியை அதிகரிப்பதை யோசிக்க வேண்டும். அதற்கு இயற்கை விவசாயம் தான் ஒரே வழி என்று, சக விவசாயிகளுக்கும் அழைப்பு விடுக்கிறார் விஜயன்.