Politics
நாமக்கல் மாளிகையில் முதல்வர் அலுவலகம்; கெடுபிடிகளால் விழிபிதுங்கும் ஒப்பந்த நிறுவனம்

சென்னை: நாமக்கல் மாளிகையில் முதல்வர் அலுவலகம் அமைக்க ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், பொதுப்பணித்துறை நடவடிக்கையால் விழி பிதுங்கி நிற்கிறது.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், தமிழக அரசின் தலைமை செயலகம் மற்றும் சட்டசபை இயங்கி வருகிறது. இங்குள்ள பாரம்பரிய கோட்டை கட்டடத்தில், முதல்வர் விஜய் அலுவலகம் உள்ளது.
இடநெருக்கடி காரணமாக முதல்வரை சந்திக்க வருபவர்களும், அவரது ஆலோசகர்கள், செயலர்கள் உள்ளிட்டோரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, நாமக்கல் கவிஞர் மாளிகையின், 10வது தளத்திற்கு முதல்வர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய், கடக ராசிக்காரர் என்பதால், வங்கக்கடலை பார்த்தபடி, உயரத்தில் இருந்து பணியாற்றினால், தொடர்ச்சியாக அடுத்த, 20 ஆண்டுகள் அவர் முதல்வராக இருக்கலாம் என, ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை கூறியுள்ளதாக தெரிகிறது.
முதல்வர் அலுவலகம் அமைக்க, 6.17 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், 5.54 கோடி ரூபாய்க்கு முதல்கட்ட பணிகள் செய்யப்பட உள்ளன. இதற்காக, பொதுப்பணித்துறை வாயிலாக, 'ஆன்லைன்' முறையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த, 'ராசி பில்டர்ஸ்' என்ற நிறுவனம், 3.78 கோடி ரூபாயில் பணியை முடிக்க முன்வந்தது. அரசு மதிப்பீட்டை விட 32 சதவீதம் குறைவான தொகை கோரிய, அந்நிறுவனத்திற்கு பணிகள் வழங்கப்பட்டு உள்ளன.
ஆனால், பணியை எடுத்த நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை அடுத்தடுத்து கெடுபிடி விதிக்க துவங்கியுள்ளது. இதனால், ஒப்பந்த நிறுவனம் பணிகளை துவங்காமல் விழிபிதுங்கி நிற்கிறது.
இதுகுறித்து, தலைமை செயலக வட்டாரத்தில் கூறப்படுவதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் தான், பொதுப்பணித்துறை கட்டுமான பணிகளை மேற்கொண்டனர். தி.மு.க., ஆட்சியிலும் இதுதொடர்ந்தது.
முதல்முறையாக சென்னையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு, முதல்வர் அலுவலகம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
குறைவான தொகையை பதிவு செய்து, அந்நிறுவனம் ஒப்பந்தம் பெற்றதை, மற்ற ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளாலும் ஜீரணிக்க முடியவில்லை. இதனால், கட்டுமான பணியில் ஈடுபடும் நிறுவனத்திற்கு போதிய ஆலோசனைகளை வழங்காமல், நெருக்கடி தர துவங்கிஉள்ளனர்.
'கட்டுமான பணிக்கு, நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள லிப்ட்டை பயன்படுத்தக் கூடாது. இரவு நேரங்களில் மட்டுமே பொருட்களை எடுத்து செல்ல வேண்டும். பகல் நேரங்களில் வெளிப்புறமாக எந்த பணியையும் மேற்கொள்ளக் கூடாது' என, அடுத்தடுத்து கெடு விதிக்க துவங்கியுள்ளனர்.
மேலும், 'குறைந்த செலவில் எப்படி பணியை முடிக்கிறீர்கள்' என்று பார்க்கிறோம் என கிண்டலடித்தும் வருகின்றனர். ஆனால், கம்பி, எம்சாண்ட், சிமென்ட், பிளைவுட், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், குறைந்த விலையில் வழங்க போட்டி போடுகின்றன. இதனால், கட்டுமான செலவு குறையும் என, ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் எதிர்பார்க்கிறது. இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.