மலைப்பாதையில் 12 கி.மீ., துாரம் நடந்தே வீடு திரும்பிய மாணவர்கள் முன் அறிவிப்பின்றி அரசு பஸ் ‘டிரிப் கட்’
நத்தம், செப்.9 திண்டுக்கல் மாவட்டம் செந்துறையில் இருந்து மலை கிராமங்கள் வழியாக இயக்கப்படும் அரசு பஸ் முன்

திண்டுக்கல் மாவட்டம் செந்துறையில் இருந்து மலை கிராமங்கள் வழியாக இயக்கப்படும் அரசு பஸ் முன் அறிவிப்பின்றி அடிக்கடி ‘டிரிப் கட்’ செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள் மலைப்பாதை வழியாக 12 கி.மீ., துாரம் நடந்தே வீடு திரும்பும் அவல நிலை தொடர்கிறது.
வடமதுரை ஒன்றியம் பஞ்சந்தாங்கி, காக்காயன்பட்டி, மாமரத்துப்பட்டி, அண்ணா நகர், வ.புதுார் காலனி, நால்ரோடு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நத்தம் ஒன்றியம் செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு மலை கிராமங்கள் வழியாக பஞ்சதாங்கியில் இருந்து செந்துறைக்கு தினமும் காலை 8:30 மணிக்கும், பின்னர் அங்கிருந்து மாலை 5.10 மணிக்கு பஞ்சதாங்கிக்கும் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது.
ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் இந்த பஸ் இயக்கப்படாததுடன், முன் அறிவிப்பின்றி ‘டிரிப் கட்’ செய்யப்படுகிறது. இதுபோன்று மாலை நேரத்தில் அடிக்கடி ‘டிரிப் கட்’ செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்ப காத்திருக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாற்று போக்குவரத்து வசதி இல்லாமல் தவிக்கின்றனர். வேறு வழியின்றி மலைப்பாதை வழியாக 12 கி.மீ., துாரம் நடந்தே வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து வீடு திரும்ப மாணவ, மாணவிகள் காத்திருந்தனர். ஆனால் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் மாலை 5:10 மணிக்கு இயக்கப்பட வேண்டிய செந்துறை – -பஞ்சந்தாங்கி அரசு பஸ் ‘டிரிப் கட்’ செய்யப்பட்டது.
வேறு வாகன வசதி இல்லாத நிலையில் மலைப்பாதை வழியாக நடந்து இரவு வீடு சேர்ந்தனர். பிள்ளைகள் உடல் சோர்வுடன் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வீடு திரும்பியதால் பெற்றோரும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது.
அதிகாரிகள் கவனத்திற்கு... சவரிமுத்து, முன்னாள் ஊராட்சி தலைவர், செந்துறை: மலை கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு அரசு பஸ் என்பது போக்குவரத்து வசதிக்கு மட்டுமல்ல; அவர்களின் கல்வியை தொடர்வதற்கான முக்கிய ஆதாரமாக உள்ளது. 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்படுத்தும் அரசு பஸ் அடிக்கடி முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படுவது கவலைக்குரிய விஷயம். மாணவர்கள் 12 கி.மீ., துாரம் மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்களது பாதுகாப்பும், கல்வியும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்ய வேண்டும். காலை, மாலை நேரங்களில் பஸ்கள் தடையின்றி இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பஸ் இயக்கத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட கிராம மக்கள், பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.