தேசிய நெடுஞ்சாலையில் ‘பேரிகேட்’கள் வாகன ஓட்டிகள் ‘திக்... திக்...’ பயணம்

திருமழிசை: சென்னை – பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள ‘பேரிகேட்’களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்துவதற்கான சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நெடுஞ்சாலை வழியே, தற்போது ஒரு லட்சத்திற்கு அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், இந்த நெடுஞ்சாலையில் திருமழிசை, செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், பாப்பன்சத்திரம், செட்டிபேடு, தண்டலம் உட்பட பல இடங்களில், பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் ‘பேரிகேட்’ வைத்து தடுப்புகள் அமைத்துள்ளனர்.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இந்த தடுப்புகளால், வாகனங்கள் சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதோடு, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நெடுஞ்சாலையில் ‘பேரிகேட்’கள் வைக்கக் கூடாது. ‘பேரிகேட்’கள் வைக்கப்பட்டால் போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும்’ என்றார்.
இதுகுறித்து, போலீசாரிடம் கேட்டபோது, ‘வேகமாக வாகனங்கள் வரும்போது ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக, கிராமப்பகுதிகளுக்கு சாலை பிரியும் இடத்தில், நெடுஞ்சாலையில் உள்ள சிக்னலில், ‘பேரிகேட்’ வைக்கப்பட்டு உள்ளது’ என்றார்.
ஆனால், இந்த ‘பேரிகேட்’களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, விபத்தில் சிக்கி வருவதாக, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் ஆய்வு செய்து, ‘பேரிகேட்’களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.