Politics
அ.தி.மு.க., ஆட்சியில் அப்துல்கலாம் நினைவிடத்திற்கு 2 ஏக்கர் ஒதுக்கீடு: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பேச்சு
முதுகுளத்துார்: ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் அமைப்பதற்கு அ.தி.மு.க., ஆட்சியில் இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று முதுகுளத்துாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி பேசினார்.
முதுகுளத்துாரில் எம்.பி., தர்மர் இல்ல திருமண விழாவில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி தலைமையேற்று நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
திருமண விழாவில் நான் அரசியல் பேசுவதை தவிர்த்து விடுவேன். சில அரசியல் கட்சித் தலைவர்கள் திருமண நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டு மணமக்களை வாழ்த்தியதோடு அவர்களுடைய நிலைப்பாட்டையும் எடுத்துச் சொல்லி விடுகிறார்கள். அ.தி.மு.க., ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம், ராமநாதபுரத்தில் சட்டக்கல்லுாரி, மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை அமைக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம் அமைப்பதற்காக இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் அரசு கலைக் கல்லுாரி கட்டப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நீர் மேலாண்மை, குடிமராமத்து பணிகள், தடுப்பணைகள் கட்டப்பட்டது. மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றத்திற்காக தனுஷ்கோடி -அரிச்சல்முனையில் ரோடு அமைக்கப்பட்டது. மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தின் பாசன வசதிக்காக ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் காவிரி- குண்டாறு -வைகை இணைப்பு திட்டத்தை புதுக்கோட்டையில் துவக்கி வைத்தேன். இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும்.
இதுகுறித்து சட்டசபையில் வலியுறுத்திய நிலையில் இந்த அரசு முதல் கட்டமாக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.மேலும் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
