நடைபாதையை மறைத்த முட்செடிகள் அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள்
திருவள்ளூர், செப். 17– திருவள்ளூர் – திருத்தணி நெடுஞ்சாலையோரம், நடைபாதையை மறைத்தபடி வளர்ந்துள்ள

திருவள்ளூர் – திருத்தணி நெடுஞ்சாலையோரம், நடைபாதையை மறைத்தபடி வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெரியகுப்பம் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் – திருத்தணி நெடுஞ்சாலையின் இருபுறமும், பெரியகுப்பத்தில் இருந்து டோல்கேட் – ஊத்துக்கோட்டை சாலை சந்திப்பு வரை, நெடுஞ்சாலை துறையினர் மழைநீர் வடிகால்வாய் அமைத்துள்ளனர்.
மழை காலத்தில், சாலையில் பெய்யும் மழைநீர் எளிதில் வடியும் வகையில், இந்த வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது. அந்த வடிகால்வாய்க்கு மேல், பாதசாரிகள் நடக்கும் வகையில், துருப்பிடிக்காத கம்பி தடுப்புடன் நடைபாதையும் அமைக்கப்பட்டு, சிமென்ட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கலெக்டர் அலுவலகம் எதிரில், சாலையில் மறுபுறம் முட்செடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. அந்த முட்செடிகள், நடைபாதையை மறைத்தபடி உள்ளதால், பொதுமக்கள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அந்த செடிகளைச் சுற்றிலும் தேள், பூரான், பாம்பு போன்ற விஷப் பூச்சிகள் நடைபாதையில் சுற்றித்திரிகின்றன. இதனால், அப்பகுதியில் நடந்து செல்ல, அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே, சாலையோரம் நடைபாதையை மறைக்கும் வகையில் வளர்ந்துள்ள முட்செடிகளை, நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெரியகுப்பம் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.