Religion
தடைகளை விலக்கி வெற்றி தரும் பிரமாண்ட பிள்ளையார்... முல்பாகல் அருகில் குருடுமலை விநாயகர்!
சுமார் 14 அடி உயரத்தில் ஒரே கல்லாலான சாளக்ராம திருமேனியராக தரிசனம் தருகிறார் இந்த கணபதி. தம்மை வணங்குவோருக்கு வெற்றியைத் தருபவராம் இவர்.|தடைகளை விலக்கி வெற்றி தரும் குருடுமலை பிரமாண்ட பிள்ளையார்| Kurudumalai’s Grand Pillaiyar: Removing Obstacles and Bestowing Success

- நித்ய கல்யாணி - வேறெங்கும் காண்பதற்கரிய வகையில்... சுமார் 14 அடி உயரத்தில் ஒரே கல்லாலான சாளக்ராம திருமேனியராக தரிசனம் தருகிறார் இந்த கணபதி. தம்மை வணங்குவோருக்கு வெற்றியைத் தருபவராம் இவர்.
நான்கு யுகங்களாக அருள்பொலியும் விநாயகரின் திருக்கோயில் ஒன்று கர்நாடக மாநிலத்தில் அமைந்திருக்கிறது. சிவன், பிரம்மன், திருமால் ஆகிய மூவராலும் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இந்தப் பிள்ளையார் என்பது கூடுதல் சிறப்பு.
கர்நாடக மாநிலம் - கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள புண்ணிய க்ஷேத்திரம் முல்பாகல். இங்குள்ள குருடுமலையின் அடிவாரத்தில்தான் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் ஆகிய நான்கு யுகங்களாக அருள்பாலிக்கும் மகாகணபதி கோயில் கொண்டிருக்கிறார்.
வேறெங்கும் காண்பதற்கரிய வகையில்... சுமார் 14 அடி உயரத்தில் ஒரே கல்லாலான சாளக்ராம திருமேனியராக தரிசனம் தருகிறார் இந்த கணபதி. தம்மை வணங்குவோருக்கு வெற்றியைத் தருபவராம் இவர்.
ஆதியில் திறந்தவெளியில் வீற்றிருந்தார் இந்த மகாகணபதி. கலி யுகத்தில் 14 முதல் 16-ம் நூற்றாண்டு வரையிலான காலக் கட்டத்தில், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவ ராயர் தற்போதுள்ள அழகிய கோயிலைக் கட்டினாராம். இந்தப் பிள்ளையாரை கௌடின்ய மகரிஷி வழிப்பட்டுள்ளார்.
முல்பாகலில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் மலையடி வாரத்தில் அமைந்திருக்கிறது, இந்தப் பிள்ளையார் கோயில். கன்னடத்தில் ‘முதல’ என்பது கிழக்கு என்றும், ‘பாகிலு’ என்பது வாசல் என்றும் பொருள்படும். மைசூர் நாட்டின் கிழக்குப் பகுதி வாசல் என அழைக்கப்பட்ட இப்பெயர் காலப் போக்கில் ‘முல்பாகல்’ என்று மாறி விட்டது. இடைக்காலத்தில் இந்தப் பகுதி சோழர்களின் அரசியல் ஆதிக்கத்துக்குள்ளும் இருந்துள்ளது. அவர்கள் காலத்தில் கோலார் பகுதி `நிகரிலி சோழ மண்டலம்’ என்றும் பின்னர் `ஜெயங்கொண்ட சோழமண்டலம்’ என்றும் நிர்வாகப் பெயர்களுடன் விளங்கியது.
தலப்புராணத்தின்படி... கிருத யுகத்தில் திரிபுராசுரன் என்ற கொடிய அசுரனை அழிக்க மும்மூர்த்தியரும் முடிவுசெய்தார்கள். எதைச் செய்வதானாலும் முதலில் பிள்ளையாரை வழிபட வேண்டும் அல்லவா? அதன்படி, அசுரனுடனான போர் தொடங்கும் முன்பு இந்த மலையடிவாரத்தில் பிரமாண்ட மான சாளக்ராம விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்களாம். அப்போது முப்பத்துமுக்கோடி தேவர்களும் கூடியதால், இந்த இடத்துக்கு கூடாத்திரி அல்லது கூடுமலை என்ற பெயர் ஏற்பட்டது என்கிறார்கள். இந்தப் பெயரே காலப்போக்கில் `குருடு மலை’ என்று மருவியதாம்.
திரேதா யுகத்தில் சீதாப்பிராட்டியாரை மீட்கச் சென்ற ராம பிரான், இலங்கைக்குச் செல்லும் வழியில் இந்தத் தலத்துக்கு வந்தார்; ராவணனை வெல்லும் ஆற்றல் வேண்டி இந்தப் பிள்ளையாரை வழிபட்டார்.
அதேபோல், துவாபர யுகத்தில் கிருஷ் ணனுக்கு சியாமந்தக மணியைத் திருடிவிட்டதாக ஓர் அவப்பெயர் ஏற்பட்டது. அந்த வீண்பழி நீங்க கிருஷ்ணர் இங்கு வந்து இந்தப் பிள்ளையாரை வழிபட்டாராம். இவரின் அருளால் வீண்பழியும் அகன்றது என்கிறது புராணம். பாண்டவர்களும் குருக்ஷேத்திரப் போரில் வெற்றிபெற, இந்தப் பிள்ளையாரை வழிபட்டுச் சென்றதாகச் சொல்கிறார்கள்.
கலியுகத்தில் கௌடின்ய மகரிஷி இவரை வழிபட்டதால், இந்தத் தலம் `கௌடின்ய க்ஷேத்திரம்’ என்றும் அழைக்கப் படுகிறது. குருடு மலைக்கு மேல் கௌடின்ய நதியின் உற்பத்தி ஸ்தலம் உள்ளது. அங்குதான் கௌடின்ய மகரிஷி தவம் செய்தார். அப்போது வெட்டவெளியில் அருள்பாலித்த பிள்ளையாரை அவர் வழிபட்டு வந்தாராம். இப்போது இந்தக் கோயிலின் அர்ச்சகராக உள்ள அரவிந்த் குருக்களின் முதல் தலைமுறையைச் சேர்ந்த பிரம்ஹிபூத நஞ்சுண்ட தீட்சதர் என்பவர், கௌடின்ய மகரிஷியின் சீடராகத் தொண்டு செய்தவராம். அவர், இந்தக் கோயிலின் வளாகத்திலேயே ஒரு வில்வமரத்தின் அடியில் ஜீவசமாதி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் வாரிசுகள் பதினாறு தலைமுறைகளாக கோயில் திருப் பணியைத் தொடர்கின்றனர்.
இந்தக் கோயிலில் அருளும் மகா கணபதி ‘விக்னஹர்த்தா’ எனப் போற்றப்படுகிறார். அனைத்துத் தடைகளையும் நீக்குபவர் என்று பொருள். சுமார் 14 அடி உயரம்; 7 அடி அகலத்துடன் பிரமாண்ட உருவினராக... நான்கு திருக்கரங் களுடன் தரிசனம் தருகிறார். பின்னிரு கரங்களில் பாச-அங்குசமும்; முன்னிரு கரங்களில் மோதகமும் தந்தமும் கொண்டு அருள்பாலிக்கிறார்.
தூய மனதுடன் இந்தப் பிள்ளையாரை வேண்டிக் கொண்டால், அந்தப் பக்தர்களின் விருப்பங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறுகின்றன. அவர்கள் மேற்கொள்ளும் காரியங்களில் சிறந்த வெற்றியை அடைகிறார்கள். குறிப்பாக, தேர்தலுக்கு முன் இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் இங்கு வந்து இந்தக் கணபதியை வழிபட்டுச் செல்வார்களாம். அவர்கள், தேர்தலிலும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்கள் என்று கூறி நம்மை வியக்கவைக்கிறார் அரவிந்த் குருக்கள்.
இங்கே வருடம்தோறும் விநாயகர் சதுர்த்தி மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. சதுர்த்திக்கு மறுநாள் முதல் 5 நாள்கள் பிரம்மோத்ஸவம் நடைப்பெறும். சுவாமிக்கு சங்கடஹர சதுர்த்தி அன்று சிறப்பு அபிஷேக - அலங்காரம் உண்டு. விசேஷமாக 150 கிலோ வெண்ணெய்யைக் கொண்டு அலங்காரம் செய்வார்கள். அதேபோல், இங்கு நடைபெறும் மண்டல பூஜை மிகவும் பிரசித்தம். பக்தர்கள் தங்களது விருப்பங்கள் நிறைவேற, ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து கணபதிக்குப் பூஜை செய்வார்கள். அவ்வாறு வழிபட்ட பலருக்கும் வேண்டுதல் பலித்துள்ளதால், இந்தியாவின் பல இடங்களில் இருந்து பக்தர்கள் மண்டல பூஜை செய்ய இங்கு வருகிறார் கள். தொலைதூரத்தில் இருப்பவர்கள் - நேரில் வர முடியாதவர்கள், குருக்கள் மூலம் இந்தப் பூஜையைச் செய்ய முடியும்.
குருடுமலையில் கணபதியுடன் சேர்ந்து, அவரை ஸ்தாபித்த சிவனும் விஷ்ணுவும் தனித்தனிக் கோயில்களில்... அருள்மிகு சோமேஸ்வரர் என்றும், அருள்மிகு சென்ன கேஸ்வரர் என்றும் கோயில் கொண்டிருக்கிறார் கள். இந்த இரண்டு கோயில்களும் ஆதியில் கௌடின்ய மகரிஷியால் ஸ்தாப்பிக்கப் பட்டவை. பிரம்மனுக்கு வழிபாடு இல்லை என்பதால், இங்கே அவருக்குக் கோயில் இல்லையாம்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தேவி - பூதேவி சமேத சென்னகேஸ்வரர் ஆலயம், முகலாயர் படையெடுப்பில் சிதிலம் அடைந்தபோது, பெருமாளை சுமார் 700 வருடங்கள் சிவன் கோயிலில் வைத்து பூஜித்த நிகழ்வும் இங்கு நடந்துள்ளது.
நான்கு வருடங்களுக்கு முன் திருக் கோயிலைச் சீரமைத்து பெருமாளை மறுபடியும் ஸ்தாபித்து கும்பாபிஷேகம் நடத்தி யுள்ளனர். வெறெங்கும் காண்பதற்கரிய வகையில், இங்கே பெருமாளுக்கு எதிரில் கருடனுக்குப் பதில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இங்கு பாறை மேல் பெருமாள் உள்ளதால், பெளர்ணமி தினங்களில் பாறைக்கு அதிபதியான சனி சாந்தி ஹோமமும், சுதர்சன ஹோம மும் நடைபெறுகின்றன.
வெள்ளிக்கிழமையில் மூலவருக்குத் திருமஞ்சன அபிஷேகம் நடைபெறுகிறது. இக்கோயிலை முதலில் ஹொய்சாள மன்னரும் பின்னர் கிருஷ்ண தேவராயரும் கட்டியுள்ளனர்.
ராஜராஜ சோழர், 12-ம் நூற்றாண்டில் இந்தத் தலத்தில் அருள்மிகு ஷமதாம்பாள் சமேத அருள்மிகு சோமேஸ்வரர் கோயிலைக் கட்டியுள்ளார். இதன் சிறப்பம்சம்... பூமிக்கடி யில் அஸ்திவாரம் அமைக்கப்படாமல், (boulder basement) பாறை மீது அமைந்துள்ள கற்கோயில் ஆகும். இத்தகு சிறப்பான கோயில் பல படையெடுப்புகளில் இருந்து தப்பி, இன்றுவரை கம்பீரமாக நிற்பது, நம் சோழர் களின் கட்டுமானச் சிறப்பை உணர்த்துகிறது.
இந்த சோமேஸ்வரரை தரிசித்தால், காசி விஸ்வநாதரை தரிசித்த பலன் கிடைக்குமாம். சுவாமியை தரிசிக்கும்போதே கோபுர தரிசனமும் கிடைக்கும் வகையில் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது அற்புதம். அம்பிகை ஷமாதம்பாள் கருணை நாயகி. ஷமாதம்பாள் என்றால், மன்னிப்பவள் என்று பொருளாம். இந்தியாவில் இந்தத் தலத்தில் மட்டுமே அம்பிகையின் அருளால் நம் பாவங்களுக்கு மன்னிப்புப் பெற முடியும் என்கிறார்கள்.
காலபைரவர், நாக பைரவர், முருகப் பெருமான் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். கருவறை, அர்த்த மண்டபம் மற்றும் நவரங்க மண்டபத்துடன் அமைந்துள்ளது இந்தச் சிவாலயம்.
நவரங்க மண்டபத் தூண்களில் துலங்கும் அழகிய நுணுக்கமான வேலைப் பாடுகள், சோழர் காலத்தில் புகழ்பெற்ற சிற்பிகளான அமரஷில்பி ஜகனாச்சாரி, அவரின் மகன் டகனாச்சாரி ஆகியோரின் கைவண்ணமாம். கோயிலைச் சுற்றிலும் தமிழ்க் கல்வெட்டுகள் பலவற்றைக் காண முடிகிறது.
இங்ஙனம், புராணச் சிறப்பும் சரித்திரத் தொன்மையும் வாய்ந்த இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்துக்கு நீங்களும் ஒருமுறையேனும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு சென்று வாருங்கள். அங்கே மகா கணபதியை வணங்கும் கணத்திலேயே உங்களின் சகல விதமான பிரச்னைகளும் காணாமல் போகும்; நீங்கள் மனதில் நினைத்திருக்கும் காரியங்கள் எல்லாம் மகத்தான வெற்றி பெறும்!
