Politics
285 ஓட்டு சாவடிகளுக்கு 342 இயந்திரங்கள்: மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கு தயார்

செங்கல்பட்டு: மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையொட்டி, 285 ஓட்டுச்சாவடிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் சரிபார்க்கும் கருவிகள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தில் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தனி அறையில் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுராந்தகம் தனித்தொகுதிக்கு அக்., 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணைய இணைய செயலி மூலம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வீரப்பன் முதற்கட்ட இயந்திரங்களை ஒதுக்கீடு செய்தார்.
இதன்படி, 342 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 342 கட்டுப்பாட்டு கருவிகள், 370 சரிபார்க்கும் கருவிகள் ஆகியவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மதுராந்தகத்துக்கு அனுப்பிப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், மதுராந்தகம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான நரேந்திரன், தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
