Politics
டில்லி செங்கோட்டை சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலே குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ., உறுதி

புதுடில்லி: 'டில்லி செங்கோட்டை அருகே கடந்தாண்டு நவம்பரில் நடந்த கார் வெடிகுண்டு சம்பவம் தற்கொலைப் படை தாக்குதல்' என, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிகையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நவ., 10ல், டில்லி செங்கோட்டை அருகே போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. காரை ஓட்டிய, ஜம்மு - காஷ்மீர் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி உட்பட 11 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ., இது பயங்கரவாத தாக்குதல் என உறுதி செய்தது.
இந்த விவகாரத்தில், ஹரியானாவின் அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றிய மூன்று டாக்டர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக, குற்றஞ்சாட்டப்பட்ட 13 பேருக்கு எதிராக, 4,500 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., கடந்த மாத இறுதியில் தாக்கல் செய்தது. அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
காரை ஓட்டி வந்த முக்கிய குற்றவாளியான உமர் நபி, அதில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்த விவகாரத்தில், ஜம்மு - காஷ்மீரில் இருந்து செயல்படும் அன்சார் கஸ்வத் - உல் - ஹிந்த் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்புள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பயங்கரவாத கருத்துகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட அல் - கொய்தா பயங்கரவாத அமைப்பின், 'லோன் முஜாஹித் பாக்கெட் புக்/ஹவ் டு பிகம் அன் அசாசின்' என்னும் கையேட்டை பின்பற்றி இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.இந்த கையேட்டில், வெடிப்பொருட்கள், ஆயுதங்கள், பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கை குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன. மறைந்திருத்தல், ரகசியமாக ஊடுருவுதல், சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க போலி அடையாளங்களை உருவாக்குதல் உள்ளிட்ட செயல்பாட்டு பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்கள் அந்த கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்கள், இரண்டு ஆண்டுகளாக செங்கோட்டை பகுதியை ஆய்வு செய்து தாக்குதலை நடத்தியுள்ளனர். சம்பவம் நடப்பதற்கு முன், உமர் நபியின் கூட்டாளிகள் ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் வெடிப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து தானும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் அவசர அவசரமாக இந்த தாக்குதலை உமர் நபி அரங்கேற்றியுள்ளார்.
மத்திய அரசின் முக்கிய அடையாளமாக செங்கோட்டை உள்ளதால் அங்கு தாக்குதல் நடத்த குற்றவாளிகள் திட்டமிட்டிருந்தனர். இந்த விபரங்கள் அனைத்தும், அல் - பலாஹ் பல்கலை வளாகத்தில் கைதானவர்களின் இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வாயிலாக உறுதியானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
