கள்ளக்குறிச்சி நகராட்சியில் வளர்ச்சி பணி: கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் அண்ணா நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் 153 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய்கள் மற்றும் மேன்ேஹால் பணிகளையும், 21 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைநிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணிகளையும் கலெக்டர் பத்மஜா ஆய்வு செய்தார்.
மேலும் கால்நடை பெருமருத்துவமனையில் அமைந்துள்ள தெரு நாய்களுக்கான அறுவை சிகிச்சைக் கூடம், நாய்கள் பராமரிப்பு கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்.
பின், பி.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தேவையான முடநீக்கு உதவி உபகரணங்கள் பெறுவதற்கு சிறப்பு தேர்வு முகாம், தனியார் மண்டபத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் மாவட்ட அளவிலான இயற்கை வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கையும் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இடுபொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் நேரடி விற்பனை மையம், பல்துறை சார்ந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
சங்கராபுரம் அடுத்த மேலப்பட்டு கிராமத்தில் கீலேரியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.