Arts, culture, entertainment and media
DC Exclusive: "லோகேஷை நடிக்க வச்சதுக்கு காரணம் இதுதான்!" - அருண் மாதேஸ்வரன் பேட்டி
லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான 'டிசி' படத்தின் வெற்றி, அனிருத்தின் இசை குறித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் | Director Arun Matheswaran’s exclusive interview on the success of 'DC' starring Lokesh Kanagaraj, working with Anirudh

'டிசி' படத்திற்காக அருண் மாதேஸ்வரனைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான 'டிசி' படத்திற்கு வசூலாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்கு படம் வந்திருக்கிறது. இப்போதும் பார்வையாளர்களின் வியூஸ்களை அள்ளி வருகிறது 'டிசி'. இந்தப் படத்திற்காக அருண் மாதேஸ்வரனைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.
நம்மிடம் பேசத் தொடங்கியவர், "என் கரியரில் இப்படி ஒரு விஷயத்தை நான் அனுபவிப்பது இதுவே முதல் முறை. அதனால் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. என் மீது நம்பிக்கை வைத்துப் பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது" எனப் பகிர்ந்தவரிடம் கேள்விகளை முன்வைத்தோம்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜை, நடிகராகக் களமிறக்கும்போது, ஏதும் அழுத்தம் இருந்ததா?
லோகேஷ் கனகராஜை நாம் எளிதாக ஒரு 'ஃபர்ஸ்ட் டைம் ஆக்டர்' என்று சொல்லிவிட முடியாது. அவர் ஒரு பர்சனாலிட்டியாகவே மிகப்பெரிய 'ஸ்டார்'. அதனால், முதல் நாளிலிருந்தே நான் ஒரு ஸ்டாரை வைத்துத்தான் படம் எடுக்கிறேன் என்கிற மனநிலையில்தான் இருந்தேன். இதை அறிவிக்கும்போதே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். இந்த கதையை நான் ரொம்ப வருஷமாக பண்ண வேண்டும் என்று வைத்திருந்த கதை. இந்தக் கதைக்கு ஓரளவு பரிச்சயமான முகம் தேவைப்பட்டது. ஆனால், பெருசா நடிக்காத ஒரு புது முகமாக இருந்தால் நல்லா இருக்கும் என்று தோணியது. அப்படித்தான் லோகேஷ் நினைவுக்கு வந்தார்.
லோகேஷிடம் சென்று இந்த கதையைச் சொன்னபோது அவருடைய ரியாக்ஷன் என்னவாக இருந்தது?
நான் அவரிடம் கேட்பதற்கு முன்னாடியே, "லோகேஷ் நடிக்கப் போறான், இரண்டு மூணு டைரக்டர்ஸ் கிட்ட பேசிட்டு இருக்காங்க" என்று வதந்திகள் வந்தன. எனக்கும் இந்த கதையை உடனே பண்ண வேண்டும் என்று எண்ணம் இருந்ததால், திடீரென்று ஒரு நாள் அவரிடம், "இந்த மாதிரி ஒரு கதை இருக்கு, பண்றியா?" என்று கேட்டேன். கதை அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்படித்தான் இந்த ப்ராஜெக்ட் நடந்தது. இந்த படத்தைப் பொறுத்தவரை லோகேஷ் முழுமையாக ஒரு நடிகராகத்தான் செட்டுக்கு வந்தார். படப்பிடிப்பின் போது, 'டேய், இந்த டயலாக் சொல்லலாமா, இப்படி பண்ணலாமா?' என்று சாதாரணமாகப் பேசிக் கொள்வோம். மத்தபடி, 'நான் என் டைரக்டர் என்பதை கழற்றி வச்சிட்டேன், நீ பார்த்துக்கோ' என்கிற மனநிலையில்தான் அவர் வந்தார். அதனால் எனக்கோ அல்லது அவருக்கோ எந்த அழுத்தமும் இல்லை. நான் சொல்கிற கதையை அவன் உள்வாங்கி பண்ண வேண்டும். அந்த அளவுக்கு இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருந்தது.
படம் ரிலீஸுக்கு முன்னாடி நீங்களோ அல்லது லோகேஷ் கனகராஜோ எந்த பேட்டிகளும் கொடுக்கவில்லையே, இது வேண்டுமென்று கவனமாக எடுத்த முடிவா?
ஆமாம், மிகவும் கான்ஷியஸாக எடுத்த முடிவுதான். 'கேப்டன் மில்லர்' ரிலீஸ் டைம்லயே நான் இதைச் சொல்லியிருக்கிறேன். ஒரு படம் ரிலீஸ் ஆகுதுன்னா, டீசர், ட்ரைலர் மற்றும் மியூசிக் வெளியிடுவோம். அதை வைத்து மக்கள் படம் பார்க்க வருவார்கள். பேட்டி கொடுத்தாலும் திரும்பவும் அதேதான் பேசப்போகிறோம். அப்போது தேவையில்லாத எதிர்பார்ப்புகள் உருவாகும். மேலும், அனிருத்தின் இசையால் இந்த படத்தோட பாடல்கள் நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு பயங்கர ரீச் ஆகிவிட்டது. அதுவே பெரிய ப்ரமோஷனாக இருந்தது.
அனிருத்தின் இசை இந்த படத்திற்குப் பெரிய பலம். உங்களுடைய முந்தைய படங்களில் பாடல்களுக்குப் பெரிய ஸ்கோப் இருக்காது. அனிருத்துடனான கூட்டணி பற்றி...
என் படங்கள்ல, பாடல்கள் பயன்படுத்தக்கூடாதுனு கிடையாது. என் முதல் படமான 'ராக்கி'யிலேயே பாடல்கள் மாண்டேஜாக இருந்தது. 'சாணிக் காயிதம்' படத்தில் பாடல்கள் கிடையாது. 'கேப்டன் மில்லர்' படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்குப் பாடல்கள் இருந்தது. இந்த படத்திலும் டான்ஸ் ஆடுற மாதிரியான பாடல்கள் இல்லாமல், இசை மட்டுமே வரும் பாடல்களைப் பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டோம். இந்தப் படத்துல ரொமான்ஸும் இருப்பதால் மியூசிக் பயங்கரமாக வொர்க் ஆக வேண்டும். நான் அனிருத் கிட்ட ஒன்னே ஒன்னுதான் சொன்னேன், "பொதுவாக வன்முறையை மக்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள். உங்க மியூசிக் அதை பார்க்க வைக்க வேண்டும்" என்று சொன்னேன். படம் ரிலீஸான அப்புறம்கூட அனிருத் கிட்ட, "ப்ரோ, என் படத்தை நீங்கள்தான் பார்க்க வைத்திருக்கிறீர்கள்" என்று சொன்னேன்.
'டிசி' படத்தில் டயலாக்ஸ் ரொம்பவே பேசப்பட்டது, இந்த முறை இயக்குநர் பிராங்க்ளின் ஜேகப் உங்களுடன் சேர்ந்து வொர்க் பண்ணியிருக்கார்...
இந்த கதை நான் கிட்டத்தட்ட 15 வருஷத்துக்கு முன்னாடி எழுதின கதை. ரொம்ப வருஷமாக என் தலைக்குள்ளேயே ஓடின கதை. இப்போது பண்ணும்போது கண்டிப்பா மறுபடியும் எழுத வேண்டியிருந்தது. பிராங்க்ளினோட ஃபர்ஸ்ட் படமும், என் ஃபர்ஸ்ட் படமும் ஒரே நாளில்தான் ரிலீஸ் ஆச்சு. நாங்கள் அப்போ இருந்தே நல்ல நண்பர்கள். அதேபோல அருண் ரஞ்சனும் கூடுதல் திரைக்கதை எழுதினார். காவல்துறை சார்ந்த விஷயங்களுக்கு அருண் ரஞ்சன் ரொம்பவே உதவியாக இருந்தார். மேலும் வசனங்களில் பிராங்க்ளினோட ஹெல்ப் தேவைப்பட்டது. ஆனால், தாஸ் - சந்திராவுக்கு இடையே வருகிற பல டயலாக்ஸ் படப்பிடிப்புத் தளத்தில் மெருகேற்றியதுதான்.
அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு போன்ற தெலுங்கு முன்னணி நடிகர்கள் படத்தைப் பாராட்டி ட்வீட் செய்திருந்தார்களே?
அல்லு அர்ஜுன் 'கேப்டன் மில்லர்' பார்த்தே போன் பண்ணிப் பேசினாரு. இப்போது 'டிசி' பார்த்துட்டு போன் பண்ணி ரொம்பப் பாராட்டினாரு. லோகேஷ் கனகராஜ் அவருக்கு டைரக்டர் என்பதால், 'லோகேஷ் நல்லா நடிச்சிருக்கான்' என்று சந்தோஷப்பட்டாரு. மகேஷ் பாபு சார் ட்வீட் போட்டிருந்ததும் ரொம்ப சந்தோஷம்.
விஜய் தேவரகொண்டா உங்கள் பெயரை அடிக்கடி பேட்டிகளில் குறிப்பிடுவாரே, அவருடன் இணைந்து படம் செய்ய வாய்ப்பு இருக்கிறதா?
விஜய் தேவரகொண்டாவும் நானும் ரொம்ப வருஷமாக படம் பண்ணலாம் என்று பேசிட்டு இருக்கோம். நான் அவருக்கு கதை சொல்லியிருக்கேன். அவர் செய்கிற ஒரு கதையும் இதே போல அவருக்குத் தோணியதால் அதை பண்ண முடியல. ஆனால் கண்டிப்பா ஃபியூச்சர்ல சேர்ந்து படம் பண்ணுவோம்.
