Politics
“வியாதி மக்களுக்கு.. லாபம் பாஜகவுக்கு..” - மனோ தங்கராஜ் சாடல்
சென்னை,திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்யும் Pharma

திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்யும் Pharma நிறுவனங்கள் பாஜகவிற்கு ரூ.400 கோடிக்கு மேல் நன்கொடை வழங்கியுள்ளன. அதே நேரம் இந்தியா வீட்டுக்கு இரண்டு நீரிழிவு நோயாளிகள் உடைய நாடாக மாறி வருகிறது. இதே மருந்து நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை பெருக்க மத்திய பாஜக அரசு Production Linked Incentive (PLI) Scheme மூலமாக ரூ.6,000 கோடி மானியம் வழங்கியுள்ளது.
மறுபுறம், அதே நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை சிபாரிசு செய்யும் மருத்துவர்களை கவர விலையுயர்ந்த அன்பளிப்புகள், வெளிநாட்டு சுற்றுலா, ஸ்டார் ஹோட்டல்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள், வரிச்சலுகைகள், இலவச மருந்துகள் என அள்ளி வீசுகின்றன. 2024-25 ஆம் ஆண்டு தரவுகளின்படி இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருந்து விற்பனையின் சந்தை மதிப்பு ரூ.15,000 கோடி. இதில் Sun Pharma, USV, Torrent, & Lupin போன்ற நிறுவனங்கள் 2025-26 நிதியாண்டில் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டியிருக்கின்றன.
நாட்டில் எப்படியெல்லாம் அநியாயம் நடக்கிறது? பொதுவாக சர்க்கரை நோயாளி ஒருவர் மாதந்தோறும் சராசரியாக ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை மருத்துவ செலவு செய்கிறார். இதே போன்று நாடு முழுவதும் உள்ள நோயாளிகள் செலவு செய்யும் தொகையில் தான் பாஜக ரூ.400 கோடிக்கு மேல் கட்சி நிதி வாங்கியிருக்கிறது. ஒரு நோயாளி தனது உயிரை காக்க செலவு செய்யும் பணத்தில் பாரதிய ஜனதா கட்சி தங்களுக்கு பங்கு வேண்டும் என்று பண வசூல் செய்வது எவ்வளவு கீழ்த்தரமானது?.
பாஜக, எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற எண்ணத்துடன் கொள்ளையடிக்கிற நோக்கத்தில் குறியாக இருக்கிறது. இந்தியாவில் இப்போது எங்கு பார்த்தாலும் நீரிழிவு நோயாளிகள் இருக்கின்றனர். 50 வயதை கடந்தோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து உட்கொண்டு காலங்கடத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்தியா போலியோ, அம்மை உட்பட பல நோய்களுக்கு எதிராகப் போராடி வெற்றி கண்டிருக்கிறது. ஆனால் நீரிழிவு நோய் மக்களை பாதிக்கும் பிரச்சனை என்ற கோணத்தில் பாஜக அரசு இன்னும் சிந்திக்கவே துவங்கவில்லை; மாறாக அது தங்களுக்கு வசூல் செய்யும் வாய்ப்பு என்ற கோணத்திலேயே பாஜக அணுகுகிறது.
மோடியின் சகாக்கள் - மக்கள் எக்கேடுகெட்டு போனால் எங்களுக்கென்ன என்ற சிந்தனையுடன், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த மக்களிடையே பிரிவினையை தூண்டிவிடுவதை மட்டும் கச்சிதமாகச் செய்து வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு வழக்கு ஒன்றில் Right to Health is an integral part of the Right to Life under Article 21 எனக் குறிப்பிட்டிருக்கிறது. ஆளும் அரசுகள் மக்களுக்கு அரசமைப்புச்சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.