அரைகுறையான சாலை சீரமைப்பு பணி: விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ராயபுரம்: ராயபுரத்தில் புதிதாக குடிநீர் குழாய்கள் புதைத்த பகுதிகளில் அரைகுறையாக கான்கிரீட் போடப்பட்டு, சாலை பணி முடியாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
ராயபுரம்-- எஸ்.என். செட்டி சாலை, எம்.சி.சாலை, கல்லறை சாலை, மேற்கு மாதா சர்ச் தெரு ஆகியன, போக்குவரத்து மிக்க முக்கிய சாலையாக உள்ளது.
இச்சாலையில் எண்ணுார், திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம் வழியாக பாரிமுனை, சென்ட்ரல் போன்ற பகுதிகளுக்கு, தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில், ராயபுரம், சி.பி. சாலை, ஜி.எம். பேட்டையில் உள்ள நகர்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதிக்காக, கல்லறை சாலையில் இருந்து, சி.பி. சாலை, எம்.சி. சாலை வழியாக, மூன்று கி.மீ., துாரத்திற்கு புதிதாக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி, கடந்த எட்டு மாதங்களுக்கு முன் நடந்தது.
இப்பணியை, குடிநீர் வாரியம் மேற்கொண்டது. இதற்காக தோண்டப்பட்ட சாலைகளில் குழாய்கள் புதைத்த பின், அங்கு ஏற்பட்ட பள்ளத்தில் கான்கிரீட் அரைகுறையாக போடப்பட்டுள்ளது.
மேலும் அங்கு தார் சாலை அமைக்காததால், பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. குறிப்பாக எஸ்.என்.செட்டி சாலை சேதமடைந்து உள்ளது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
எஸ்.என். செட்டி சாலை போக்குவரத்து நெரிசல் அதிகம் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவ - மாணவியர் சைக்கிளிலில் செல்லும்போது விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
மழைநீர் தேங்கும் போது, பள்ளங்கள் தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. மழைக்கு முன், இச்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.