மதுரையில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பள்ளி மாணவன்... வீடியோ வைரல்

மதுரையில் பள்ளி மாணவன் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. போலீசார் விசாரணைக்கு கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரையில் பள்ளி மாணவன் ஒருவர் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோரிப்பாளையம் அருகே தமுக்கம் மைதானத்தைச் சுற்றி பல்வேறு கல்லூரிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் இந்த சாலையில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலத்தின் கீழே தமுக்கம் மைதானம் - தல்லாகுளம் தபால் நிலையத்தைக் கடக்கும் பாதை ஒன்று உள்ளது.
அந்த இடத்தில் பள்ளி மாணவன் ஒருவன் நேற்று காலை 9 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் ஒருவரை தகாத வார்த்தைகளில் திட்டி தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் முதியவரை தாக்குவது போன்ற காட்சிகளும், பதிலுக்கு முதியவரும் அந்த மாணவனை தாக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. மேலும் சில ஆட்களை அழைப்பதாக கூறி மாணவன் செல்போன் மூலம் தொடர்பு கொள்ளும் காட்சிகளும், பின்னர் அந்த முதியவர் புறப்படும் போதும் மீண்டும் அந்த மாணவன் தாக்க முற்படும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் முதியவரை எதற்காக தாக்கினார்? எந்த பள்ளி மாணவன் என்பது குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி கண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
