மறைமலை நகரில் குடிநீர் தட்டுப்பாடு லாரிகளில் வினியோகிக்கும் நகராட்சி

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்ததால், நகராட்சி சார்பில் டேங்கர் லாரிகளில் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் வாயிலாக உருவாக்கப்பட்டு, தற்போது சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணறு இந்த நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், 6 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு கூடுவாஞ்சேரி பாலாறு கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக 6.24 லட்சம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
அதேபோல, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக 24.85 லட்சம் லிட்டர் குடிநீர் தினமும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
மீதமுள்ள 15 வார்டுகளுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்களான பொது கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வாயிலாக 99.29 லட்சம் லிட்டர் குடிநீர் தெரு குழாய்கள் வாயிலாக வினியோகிக்கப்படுகிறது.
மேலும், 150க்கும் மேற்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
கோடை காலத்தில் கிணறுகள் வறண்டு போனதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும், பழுதடைந்த சுத்திகரிப்பு நிலையங்கள், மின்மோட்டார்களை சரி செய்வதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது:
மறைமலை நகர் நகராட்சி பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களில் கோடை காலத்தில் வறண்ட கிணறுகளை துார்வார டெண்டர் விடப்பட்டும், பணிகள் தொடங்கப்படவில்லை.
மறுப்பு டேங்கர் லாரிகளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை 2, 14, 17, 19, 21 ஆகிய ஐந்து வார்டுகளில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே செய்யப்பட்ட பணிகளுக்கு பணம் வழங்காததால், ஒப்பந்ததாரர்கள் அடுத்த கட்ட வேலைகளை செய்ய மறுக்கின்றனர்.
பழுதடைந்த 20க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் நான்கு மாதங்களாகியும் சரிசெய்யப்படவில்லை.
மேலும், தண்ணீர் வினியோகிக்கும் ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை.
எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த வாரம் நடந்த நகராட்சி கூட்டத்தில் தண்ணீர் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. மின் மோட்டார் பழுது நீக்கும் பணிகளுக்கு 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விரைவில் அனைத்து பணிகளும் சரி செய்யப்படும் என, அவர் கூறினார்.