Politics
3 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் உயிரி எரிவாயு திட்டம் ரூ.1.80 கோடியில் செலவிட்டது வீண்
காஞ்சிபுரம், செப். 8– காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு பகுதியில் 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில்

காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு பகுதியில் 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பயோகால் எனும் உயிரி எரிவாயு மற்றும் மின் உற்பத்தி மையம், மூன்று ஆண்டுகளாக முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2016ல், அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில 22-வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு குப்பை கிடங்கு வளாகத்தில் பயோகாஸ் திட்டம் தொடங்கப்பட்டது.
புனே, பெங்களூரு போன்ற பெருநகரங்களின் கழிவு மேலாண்மை முறையைப் பின்பற்றி உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் இறைச்சிக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டது.
இதற்காக 900 க்யூபிக் மீட்டர் சேமிப்புத் திறன் கொண்ட பிரம்மாண்ட பலுான், கழிவுகளை அரைக்கும் இயந்திரங்கள் மற்றும் 440 கிலோவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஜெனரேட்டர் நிறுவப்பட்டன.
தொடக்கத்தில், இங்கு உற்பத்தியான மின்சாரத்தைக் கொண்டு குப்பை கிடங்கு வளாகத்தில் இருந்த 55 தெருவிளக்குகள் எரிய வைக்கப்பட்டன. இதனால் மாநகராட்சிக்கு மின் கட்டணம் கணிசமாகக் குறைந்ததோடு, பயோகாஸ் உற்பத்தியின் மூலம் கிடைத்த கழிவுகள் விவசாய நிலங்களுக்கு இயற்கை உரமாகவும் வழங்கி பயன்படுத்தப்பட்டு வந்தது.
3 ஆண்டுகளாக முடங்கியது ஏன்?
கடந்த 2023ம் ஆண்டு முதல் இத்திட்டம் எவ்விதப் பயன்பாடும் இன்றி முடங்கிக் கிடக்கிறது. பழுதடைந்த ஜெனரேட்டரைச் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்டாததும், பணியில் இருந்த ஊழியர்களை திடீரென நீக்கியதுமே மின் உற்பத்தி முற்றிலுமாக நிற்க முக்கியக் காரணமாகும்.
இதுகுறித்து அங்கு பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூறியதாவது:
இப்பிரச்சினை குறித்து மாநகராட்சி நிர்வாகம், மேயர் மற்றும் செயற்பொறியாளர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர்.
மையம் முற்றிலும் முடங்கிக் கிடக்கும் நிலையிலும், உயிரி எரிவாயு உற்பத்தி செய்யப்படுவதாக போலியாகக் கணக்கு காட்டி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சிலர் மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் நிதி கையாடல் செய்ததாகவும் குற்றஞ்சாட்டு உள்ளது.
இந்நிலையில், தற்போது சேகரிக்கப்படும் உணவுக் கழிவுகளும் இறைச்சிக் கழிவுகளும் எந்தப் பயன்பாடும் இன்றி நேரடியாகக் குப்பை மேட்டில் கொட்டப்பட்டு வீணடிக்கப்படுகின்றன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது,
நத்தப்பேட்டை குப்பை கிடங்கில் உள்ள பயோகாஸ் மையம் பயன்பாட்டில் தான் உள்ளது. உணவு மற்றும் கழிவுகள் வழங்குவதில் ஏற்பட்ட சில நடைமுறை தடங்கல்களால் இதன் உற்பத்தியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
தற்போது மையத்தை பராமரித்து இயக்கும் பொறுப்பை ‘ஏஎம்சி’ எனம் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மூலம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிறுவனம் பராமரிப்புப் பணிகளை ஏற்றுக்கொண்ட உடன் மையம் மீண்டும் முழுவீச்சில் இயங்கத் தொடங்கும்.
மேலும், இந்த மையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொண்டு, நத்தப்பேட்டை வளாகத்தைச் சுற்றியுள்ள தெருவிளக்குகள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு மையத்திற்கான மின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். இங்கு கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் பொதுமக்களுக்கு கட்டணமின்றி இலவசமாகவே வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.