ரோட்டோர புதர் செடிகளை வேரோடு அகற்ற நடவடிக்கை தேவை: மலைப்பகுதியில் தொடர் விபத்துக்களை தடுக்க

மாவட்டத்தை பொறுத்தமட்டில் கொடைக்கானல் சுற்றுலாத் தலமாகவும், பழநி ஆன்மிகத் தலமாகவும் உள்ளது.
தாண்டிக் குடி, கொடைக்கானல், நத்தம், பழநி உள்ளிட்டவை மலை சார்ந்த இடமாக உள்ளன.
இச்சூழலில் ரோட்டோரம் வளரும் புதர் செடிகளை முறையாக அகற்றாததால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மலைப்பகுதியில் அதிக மழைப் பொழிவால் செடி, கொடிகள் விரைவில் அடர்ந்து வளர்கின்றன. இதனால் ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. ரோட்டை கடந்து செல்லும் வாகனங்களில் செடிகளால் கீறல், கண்ணாடி சேதம டைகின்றன.
வனவிலங்குகள் புதர் செடிகளுக்குள் மறைந்து நிற்பதால் மனித, வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களை கொண்டு அவ்வப்போது செடி, கொடிகளில் கிளைகளை மட்டும் அகற்றுவதால் இவை விரைவில் துளிர்கிறது. வேரோடு செடிகள் அகற்றப்படாததால் ஊர் பெயர் பலகை, வளைவு, ரோடு சிக்னல்கள் குறித்த சமிக்ஞைகள் தெரியாத நிலை உள்ளது. புதர் செடிகளை வேரோடு இயந்திரங்கள் கொண்டு அகற்றும்பட்சத்தில் ரோடுகள் பளிச்சிடும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.