16ம் தேதி திருப்பூரில் சர்வதேச பின்னலாடை கண்காட்சி; 38 நாடுகளின் வர்த்தகர்கள் பங்கேற்பு: ஏ.இ.பி.சி. அழைப்பு

திருப்பூர்: இந்திய சர்வதேச பின்னலாடை சங்கத்தின் (ஐ.கே.எப்.ஏ.,) சார்பில் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு (ஏ.இ.பி.சி.,) ஒத்துழைப்புடன், 53-வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி வரும், 16ம் தேதி திருப்பூரில் துவங்குகிறது.
இதுகுறித்து, ஏ.இ.பி.சி., மற்றும் இந்தியா நிட்பேர் சங்கத்தின் தலைவர் சக்திவேல் கூறியதாவது:
கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.கே.எப்.ஏ., வெற்றிகரமாக, 52 சர்வதேச கண்காட்சிகளை நடத்தியுள்ளது. இந்தாண்டின், 53-வது கண்காட்சி 'செயற்கை இழை ஆடைகளில் புதுமை மற்றும் நிலையான வளர்ச்சி மூலமாக பேஷனின் எதிர்காலம்' என்ற மையக் கருப்பொருளுடன் நடைபெறுகிறது. வரும், செப்., 16 முதல் 18ம் தேதி வரை மூன்று நாட்கள் ஐ.கே.எப்.ஏ., வளாகத்தில் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
இந்த கண்காட்சியில் திருப்பூருடன் சேர்த்து கோவை, ஈரோடு, கரூர், சென்னை, பெங்களூரு, மும்பை, மொஹாலி, நொய்டா, லுாதியானா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு முக்கிய ஜவுளி உற்பத்தி மையங்களைச் சேர்ந்த ஆடை தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பெருமளவில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்வுக்கு, ஏ.இ.பி.சி., திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் ஏ.எச்.இ.ஏ., ஆகிய அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன.
இதுதவிர, ஏ.பி.ஏ.டி., பி.ஏ.ஏ., பி.எஸ்.எல்., சர்வதேச அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கண்காட்சி குறித்து உலகளவில் பிரசாரம் செய்ய, 'பாரத் டெக்ஸ் 2026, ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற கண்காட்சி, அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடைபெற்ற மேஜிக் பேர் மற்றும் மாஸ்கோ ஆகிய நாடுகளில் நடந்த முன்னணி சர்வதேச வர்த்தக நிகழ்வுகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இதன் பலனாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், இந்தோனேசியா, நெதர்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், மொரிஷியஸ், ஜிம்பாப்வே, கனடா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி கொள்முதல் முகவர்கள் மற்றும் வர்த்தகர்கள் கண்காட்சியில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்.
இந்தியா தற்போது, 38 நாடுகளுடன் செய்து கொண்டுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள், இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு உலகளவில் மிகப்பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில் அமலுக்கு வந்த இந்தியா -- இங்கிலாந்து ஒப்பந்தம் மற்றும் விரைவில் கையெழுத்தாகவுள்ள ஐரோப்பிய யூனியன் உடனான ஒப்பந்தம் ஆகியவை மூலம், உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ, 65 சதவீத சந்தையை இந்திய ஜவுளித்துறை எளிதில் சென்றடைய வழிவகுக்கும்.
எனவே, இதுவரையில்லாத வகையில், இந்த கண்காட்சி உலக வர்த்தகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும் என, எதிர்பார்க்கிறோம். மாவட்ட பொறுப்பு அமைச்சர் அருண்ராஜ், எம்.எல்.ஏ., சத்தியபாமா ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைக்கவுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், ஏ.இ.பி.சி., செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், திருக்குமரன், மேழி செல்வன், குமார் துரைசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.