Crime, law and justice
கோயில் நில ஆக்கிரமிப்பு விவகாரம்: அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
கோவில் நில ஆக்கிரமிப்பு: வாடகை பாக்கியில் சொற்ப தொகையை வசூலித்து தொடர அனுமதித்ததாக இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இருந்தவர்களிடம் வாடகை பாக்கியில் சொற்ப தொகையை வசூலித்து விட்டு, அவர்களை தொடர அனுமதிக்கும் அறநிலையத் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பாஷ்யகார ஆதி சென்ன கேசவ பெருமாள் கோவிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, சி.ஜனார்த்தனன் என்பவர், கடந்த 2015ல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக, 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிக்கை தாக்கல் செய்த அறநிலையத் துறை இணை ஆணையர், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடத்தில் அன்னதான கூடமும், பக்தர்கள் வசதிக்காக இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அறநிலையத் துறை ஆணையர் சார்பில், கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த அறிக்கையில், வாடகை பாக்கியில் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பாளர்கள் செலுத்தியுள்ளதால், நிலத்தை அவர்களுக்கே மீண்டும் வாடகைக்கு வழங்க இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, ஓராண்டுக்கு முன் தெரிவித்த போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறிய நீதிபதிகள், அன்னதான கூடம், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப் போவதாக தெரிவித்த அறநிலையத் துறை, தற்போது ஆக்கிரமிப்பாளர்களை தொடர அனுமதிக்க இருப்பதாகக் கூறியுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
25 லட்சத்து 29 ஆயிரத்து 907 ரூபாய் வாடகை பாக்கி உள்ள நிலையில், ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் என, வெறும் 7 சதவீத தொகையை ஏற்றுக்கொண்டு, அவர்களை மீண்டும் வாடகைதாரர்களாக ஆக்க, அறநிலையத்துறை முயல்வது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் எனவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் அகற்றி, செப்டம்பர் 8 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: Marie Wilson | புதுச்சேரி நீதிமன்றத்தில் மரிய வில்சன் ஆஜர்: விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மேலும், புராதன சின்ன ஆணையத்தின் அனுமதியின்றி, ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலுக்குள், அன்னதான கூடம் கட்டுவது உயர்நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
