Lifestyle and human interest
தஞ்சையில் தண்ணீருக்கு தவிக்கும் கிராமம் குடங்களுடன் அலைந்து திரியும் மக்கள்

தஞ்சாவூர்: பூதலுார் அருகே பெண்கள் மொத்தமாக சேர்ந்து லோடு ஆட்டோ வாடகைக்கு எடுத்து, 3 கி.மீ., துாரம் சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலுார் அருகே வீரபுடையான்பட்டி கிராமத்தில், 900 பேர் உள்ளனர். இக்கிராமத்தில் குடிநீர் பிரச்னை பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.
இதனால், ஆண்கள் பைக்கில் குடங்களை எடுத்து சென்றும், பெண்கள் சிலர் மொத்தமாக சேர்ந்து லோடு ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக்கொண்டும், தங்கள் கிராமத்தில் இருந்து 3 கி.மீ., துாரம் உள்ள செல்லப்பன்பட்டி, ஆவாரம்பட்டி, பூதலுார் பகுதிகளுக்கு சென்று தண்ணீரை பிடித்து வருகின்றனர்.
எங்கள் கிராமத்தில் இருந்து காவிரி, வெண்ணாறு என, ஆறுகள் 10 கி.மீ., துாரத்தில் இருந்தாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் குடிநீர் உப்பு தன்மையாக உள்ளது. இதனால், அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் உள்ளோம்.
காவிரி கூட்டு குடிநீர் திட்டம், எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள ஊர்களில் உள்ளன. ஆனால், எங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் கிடைக்கவில்லை. பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை நடவடிக்கை இல்லை.
தென் மாவட்டங்களுக்கு காவிரியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக, எங்கள் கிராமம் வழியாக இரண்டு குழாய்கள் செல்கின்றன. அவற்றில், ஒரு குழாயில் இருந்து, குடிநீருக்காக புதிய குழாய் அமைத்துக்கொடுத்தால் பயன் உள்ளதாக இருக்கும்.
நல்ல தண்ணீருக்காக கிலோ மீட்டர் கணக்கில் செல்ல வேண்டியுள்ளதால், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும், விவசாயம், கூலி, அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்லும் பலரும் அவதிக்குள்ளாகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் எங்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால், ரேஷன், ஆதார், வாக்காளர் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளோம் .
இவ்வாறு கூறினர்.