Economy, business and finance
சுபாஷ் சந்திரா மீது சி.பி.ஐ., வழக்கு சொத்து மதிப்பை உயர்த்தி காட்டியதாக குற்றச்சாட்டு

புதுடில்லி: 'எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ்' நிறுவனத்திடம் 980 கோடி ரூபாய் கடன் பெற, தனது சொத்து மதிப்பை அதிகமாக காட்டியதாக கூறப்படும் விவகாரத்தில், 'ஜீ' நிறுவனர் சுபாஷ் சந்திரா மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.
சுபாஷ் சந்திராவின் தனிநபர் திவால் வழக்கில், கடனாளர்களின் 22,006.57 கோடி ரூபாய் கோரிக்கைக்கு எதிராக 6.25 கோடி ரூபாய் திருப்பி செலுத்தும் திட்டம் முன்வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு வழங்கப்பட்ட முந்தைய ஒப்புதலுக்கு, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் ஐந்து உறுப்பினர் சிறப்பு அமர்வு தடை விதித்துள்ளது.
மேலும், சந்திரா தனது சொத்துகளை விற்கவோ, கைமாற்றவோ கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ., தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த 2018-ல் 'வசந்த் சாகர் பிராப்பர்டீஸ்' நிறுவனத்துக்கு 500 கோடி ரூபாயும், 'டிஜிட்டல் சப்ஸ்கிரை பர் மேனேஜ்மென்ட்' நிறுவனத்திற்கு 480 கோடி ரூபாயும் கடனாக வழங்கப்பட்டது.
இந்த இரு கடன்களுக்கும் சந்திரா தான் உத்தரவாதம் அளித்திருந்தார்.
அப்போது கடன் பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், தனது சொத்து மதிப்பை முறையே 59,000 கோடி மற்றும் 40,562 கோடி ரூபாய் என அவர் பொய்யாக மிகைப்படுத்தி காட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், சமீபத்திய திவா ல் நடவடிக்கைகளின் போது தனது உண்மையான சொத்து மதிப்பு 2024ல் வெறும் 31.79 கோடி ரூபாய் மட்டுமே என சந்திரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின் இந்த இரு கடன்களும் திருப்பி செலுத்தப்படாமல் மோசடி செய்யப் பட்டதால், எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்துக்கு வட்டியுடன் சேர்த்து 1,322 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற் பட்டதாக சி.பி.ஐ.,யின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.