களையிழந்த குற்றாலம்.. நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவால் ஆண்கள், பெண்கள் ஒரே பகுதியில் குளிப்பதால் சுற்றுலா பயணிகள் அவதி. வெயில் அதிகரித்தால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்.
குற்றால அருவிகளில் குறைவாக வரும் தண்ணீரில் ஆண்களும், பெண்களும் ஒரே பகுதியில் குளித்துச் செல்லும் நிலையால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் சீசன் காலங்களில் பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி புலியருவி, சிற்றருவி பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாகும். அப்போது இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் தற்போது சீசன் முடிவற்ற நிலையில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இங்குள்ள அனைத்து அருவிகளிலும் நீரின் வரத்து வெகுவாக குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, மற்றும் ஐந்தருவியில் குறைவாக வரும் தண்ணீரில் ஒரே பகுதியில் ஆண்கள், பெண்கள் குளித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்துள்ளனர். மேலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தால் முழுவதுமாக தண்ணீர் இல்லாமல் அருவிகள் வறண்டு விடும் சூழலும் ஏற்பட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.
