Arts, culture, entertainment and media
இரு இடங்களில் தென்னை ஒட்டுண்ணி உற்பத்தி நிலையம் அங்கக வேளாண்மை கருத்தரங்கம் கலெக்டர் தகவல்
ஆனைமலை: ஆனைமலையில், அங்கக வேளாண்மை மற்றும் குறுவை சாகுபடி குறித்த கருத்தரங்கம், கண்காட்சி நடந்தது. வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி வரவேற்றார். வேளாண் வணிக மேம்பாட்டு இயக்க இயக்குனர் சோமசுந்தரம், தமிழ்நாடு வேளாண் பல்கலை பேராசிரியர் முரளி அர்த்தநாரி, பூச்சியியல் துறை பேராசிரியர் சுகந்தி, மண்ணியியல் பேராசிரியர் ஜானகி பேசினர்.
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில், பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தொண்டாமுத்துார் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைக்கும் திட்டத்தின் வாயிலாக, விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த சேவைகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் ஒருங்கிணைந்த முறையில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மண் வள இயக்கம், காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கான திட்டம், இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், நம்மாழ்வார் விருது வழங்கும் திட்டம், பனை உற்பத்தி இயக்கம், வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
ஆழியாறு நகர் மற்றும் கண்ணம்பாளையம் ஆகிய இரு இடங்களில் தென்னைக்கான சிறப்பு திட்டத்தின் கீழ், புதிய தென்னை ஒட்டுண்ணி உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலை மேம்படுத்த, தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. இதுபோன்று வேளாண் பொறியியல் துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இவ்வாறு, பேசினார்.
தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொழில்நுட்ப உரையை, வேளாண் இணை இயக்குனர் விஜயகல்பனா, வேளாண் துணை இயக்குனர் அனந்தகுமார், தோட்டக்கலை துணை இயக்குனர் சித்தார்த்தன், வேளாண் வணிக இயக்குனர் ஷீலா பூசலட்சுமி, விதைச்சான்று உதவி இயக்குனர் சக்திவேல், செயற்பொறியாளர் சரவண பெருமாள் ஆகியோர் பேசினர்.