Arts, culture, entertainment and media
தஞ்சாவூர் -- பட்டுக்கோட்டை புது ரயில் பாதை திட்ட வழக்கு பதில் கோரும் உயர்நீதிமன்றம்
மதுரை: தஞ்சாவூர்--பட்டுக்கோட்டைவரை புதிய அகல ரயில் பாதை திட்டத்தை ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட இடங்களில் மேற்கொள்ள தாக்கலான வழக்கில் கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் மேல உள்ளுர் கிருஷ்ண கோபாலன், சங்கர் தாக்கல் செய்த பொதுநல மனு:
தஞ்சாவூர்--பட்டுக்கோட்டைவரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வழித்தடத்தில் ரயில்பாதை அமைக்க பிரிட்டிஷ் ஆட்சியில் திட்டம் தயாரிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதனடிப்படையில் தற்போது புதிய அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்தலாம்.
இதனால் 10 கி.மீ.,துாரம் குறையும். நீர்நிலைகளை கையகப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
அதிக பாலங்கள் அமைக்க தேவையில்லை. திட்ட செலவு குறையும்.
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட இடங்களில் புது அகல ரயில் பாதை அமைக்க வலியுறுத்தி மத்திய ரயில்வே வாரிய தலைவர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், கலெக்டருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலசுந்தரம் ஆஜரானார்.
நீதிபதிகள் கலெக்டர் செப்.17ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.