Politics
அ.தி.மு.க மாஜிக்களின் மாலை நேர மீட்டிங்... அசரீரியின் அட்டகாசம்!

என் அன்புச் சொந்தங்களே, வரலாற்றுத் தங்கங்களே, சிகரங்களைச் செதுக்குகின்ற சிங்கங்களே, காற்றோடு கைகொடுக்கும் கனல் நெருப்புகளே...
‘நாம அவசரப்பட்டுட்டோமோ...’ - இப்படியொரு ஏக்கம், அ.தி.மு.க-விலிருந்து த.வெ.க பக்கம் சென்ற மாஜிக்கள் மனங்களில் எழுந்திருக்கிறதாம். இந்த நிலையில், ஒரு மாலை வேளையில் பழைய கூட்டாளிகள் அனைவரும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கும் எனக் கற்பனையைத் தட்டிவிட்டோம்... (அ.தி.மு.க கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அசரீரியும் இவர்களோடு இணைந்துகொள்கிறது)
(ஏற்கெனவே அனைவரும் அசம்பிள் ஆகிவிட, கடைசியாக ஆவேசமாக அறைக்குள் வருகிறார் இசக்கி சுப்பையா).
வேலுமணி: வாங்க அமைச்சரே, எங்க போயிட்டு இவ்வளவு வேகமா வர்றீங்க?
இசக்கி சுப்பையா: அண்ணே, நானே எம்.எல்.ஏ-வாகூட இல்லைன்ற வருத்தத்துல இருக்கேன். நீங்க வேற ஏன் கடுப்பை ஏத்துறீங்க... கோர்ட்டுல, சட்டமன்றத்துலன்னு எங்க மனு குடுத்தாலும் என்னை எம்.எல்.ஏ-வா ஏத்துக்க மாட்டேங்கிறாங்க?
அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அசரீரி): மின்னலை விழுங்கி மின்சாரத்தைக் கொப்பளிக்கும் எடப்பாடியாரின் இதயத்துடிப்புகளே, எல்லோரும் எப்படி இருக்கீங்க?
இசக்கி சுப்பையா: யோவ் அசரீரி... பேசாம போயிடு. எல்லாம் நீ பண்ண வேலைதான்... மின்னலைப் பிடித்து மேகத்தை துடைத்துன்னு.
சி.வி.சண்முகம்: ஏன் இசக்கி நான் சொன்னதைக் கேக்காம வேக வேகமா ராஜினாமா பண்ணிட்டு, இன்னைக்குப் போய் எம்.எல்.ஏ-வா தொடர அனுமதி கேக்குறியே, இதெல்லாம் நல்லாவா இருக்கு?
இசக்கி சுப்பையா: ஏன்ணே நீங்க மட்டும் சட்டமன்றத்துல என்னை முதல்ல பேசவிடணும்னு ஸ்கூல் புள்ளை மாதிரி கோவப்பட்டீங்களே... பாவம் அன்பழகன் அண்ணன் கையை வேற ஒதறிவிட்டு, அவர் கை வீங்கிப்போச்சு.
(நடுவில் யாரோ விம்மி அழும் சத்தம் கேட்கிறது).
சி.வி.சண்முகம்: சாரி அன்பழகன், தெரியாம பண்ணிட்டேன். அதுக்காக அழாதீங்க... நம்ம டாக்டர்கிட்ட மருந்து போட்டுக்கலாம்.
கே.பி.அன்பழகன்: நான் எங்கங்க அழுதேன்... நீங்க சொன்ன டாக்டர்தான் விம்மி விம்மி அழுறாரு.
சி.வி.சண்முகம்: யோவ்... விராலிமலை விஜய் ஏன்யா அழறே.. இப்போ என்ன ஆயிப்போச்சு... எழவா விழுந்து போச்சு?
சி.விஜயபாஸ்கர்: நாம மோசம் போயிட்டோம்ணே... மோசம் போயிட்டோம். இருந்த எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா பண்ணி, வாரா வாரம் கட்சிக்காரங்களுக்கு கறிவிருந்து போட்டு, என்னைவிட சின்னப் பசங்களை எல்லாம் `மாப்ளை, மச்சான்’னு வெண்சாமரம் வீசி, பாருங்க... அசெம்பிளியில யார், யாரோ ஸ்கோர் பண்ணிக்கிட்டு இருக்காங்க?
அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அசரீரி): என் அன்புச் சொந்தங்களே, வரலாற்றுத் தங்கங்களே, சிகரங்களைச் செதுக்குகின்ற சிங்கங்களே, காற்றோடு கைகொடுக்கும் கனல் நெருப்புகளே...
சி.வி.சண்முகம்: யோவ் அசரீரி, நீ கொஞ்சம் நேரம் சும்மா இரு. உன்மேல நான் செம காண்டுல இருக்கேன்.
நத்தம் விசுவநாதன்: சரி விடுங்க சண்முகம். எப்பவும் ஏன் வெறப்பாவே சுத்திக்கிட்டு இருக்கீங்க...
சி.வி.சண்முகம்: உனக்கு என்னய்யா... நான்தான், சபாநாயகர்கிட்ட ஸ்கூல் பையன் மாதிரி, கையைக் கையைத் தூக்கி அனுமதி கேட்டுக்கிட்டு இருக்கேன். அவர் வேற பழசெல்லாம் மனசுல வெச்சுகிட்டு... ஒரே அவமானமா போச்சு.
எஸ்.பி.வேலுமணி: அதுக்குத்தாண்ணே, அப்பவே மன்னிப்புக் கடிதம் கொடுக்க வாங்கன்னு கூப்பிட்டோம். பாருங்க, நாங்கல்லாம் மானியக் கோரிக்கையில பேசிட்டோம். நீங்கதான் முறுக்கிக்கிட்டு விழுப்புரத்துக்குப் போனீங்க...
சி.வி.சண்முகம்: தேவையில்லாம வாயைக் கிளறாதய்யா, உனக்குத் தலைமை நிலையச் செயலாளர் பதவி கொடுத்திருந்தா மொத்தமா போயிருப்ப... உன்னை நம்பச் சொல்றியா?
அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அசரீரி): முத்துக் கடல் பதித்து, மூன்று நெறி வளர்த்து, கத்தும் கடல்மீது கலங்களில் விளையாடும் கற்றுக் கலை மிகுந்த எடப்பாடியாரை நம்பியிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?
கடம்பூர் ராஜூ: அசரீரி அண்ணே, கொஞ்சம் சும்மா இருங்க... நாங்களே நொந்துபோயிருக்கோம்.
சி.வி.சண்முகம்: உனக்கு என்னய்யா, ஆளுங்கட்சியில ஜம்முன்னுதானே இருக்க?
கடம்பூர் ராஜூ: நானெல்லாம் அமைச்சர், மாவட்டச் செயலாளர்னு எவ்வளவு கெத்தா கோவில்பட்டிக்குள்ள சுத்திக்கிட்டு இருந்தேன்... பொறுப்புக் கேட்டா, எம்.எல்.ஏ-வா இருந்து ராஜினாமா பண்ணியிருந்தாத்தான் கொடுப்பாங்களாம்.
இசக்கி சுப்பையா: பொறுப்பு கொடுத்துட்டா மட்டும் அப்படியே... ஏன்ணே நீங்க வேற ஒரு பய மதிக்க மாட்றாய்ங்க. நேத்து சேர்ந்த சின்னப் பையனெல்லாம் சரியான ‘ரூட்’டைப் பிடிச்சு நேரடியா சி.எம்-மைப் பார்க்குறான். புதுசா பொறுப்பு வாங்குறான்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அசரீரி): சொற்களிலே சொர்க்கத்தைக் காட்டுகின்ற இந்த அரசு, மக்களின் கவனக்குறைவால் ஆட்சி பீடத்தின் உச்சத்திலே அமரவைக்கப்பட்டிருக்கிறது. வாய்ச் சொல்லால் வானத்தை வில்லாக வளைக்கலாம். ஆனால், முயன்றால்தான் அது முடியாது என்று தெரியும். (எனச் சொல்லி முடிக்கும்போது...)
சி.வி.சண்முகம் உச்சகட்ட ஆவேசமடைய... கலைகிறது கூட்டம்!
