Arts, culture, entertainment and media
Ajith: ''பில்லா 2' படத்தை நான் இயக்காதது ஏன்?' - இயக்குநர் விஷ்ணுவரதன் விளக்கம்
அஜித் குமாரின் 'பில்லா 2' படத்தை இயக்காமல் பவன் கல்யாணின் 'பஞ்சா' படத்தை இயக்கியதற்கான பின்னணி குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன். | Director Vishnuvardhan opens up about leaving Ajith Kumar's Billa 2 to honor his prior commitment to Pawan Kalyan's Panjaa.

பில்லா 2' படத்தை தான் ஏன் இயக்கவில்லை என்பது குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன் பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமாரின் 'பில்லா', 'ஆரம்பம்' போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன்.
'பில்லா' படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகமான 'பில்லா 2' திரைப்படத்தையும் அவரே இயக்குவதாக இருந்தது.
ஆனால், அதன் பிறகு அந்தப் படத்திலிருந்து விஷ்ணுவர்தன் விலகி, 'பில்லா 2' படத்தை இயக்குநர் சக்ரி டோலெட்டி இயக்கினார்.
தற்போது இத்தனை ஆண்டுகள் கழித்து, 'பில்லா 2' படத்தை தான் ஏன் இயக்கவில்லை என்பது குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன் 'கல்டு' ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
விஷ்ணுவர்தன், "எனது திரைப்பயணத்தில் நான் சந்தித்த மிகவும் கடினமான சூழ்நிலைகளில் அதுவும் ஒன்று. அஜித் சாருடன் எனக்கு 'பில்லா 2' பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், தெலுங்கில் பவன் கல்யாண் சாருடன் 'பஞ்சா' திரைப்படத்திற்கான கமிட்மென்ட்டும் இருந்தது.
இரு படங்களின் படப்பிடிப்பு தேதிகளும் ஒரே நேரத்தில் அமைந்ததால், இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.
தொழில் ரீதியாகவும், நேர்மையின் அடிப்படையிலும் நான் பவன் கல்யாண் சாருக்குத்தான் முதலில் வாக்கு கொடுத்திருந்தேன்.
தயாரிப்பாளரும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் நான் விலகினால் அது அவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், என் வார்த்தையைக் காப்பாற்ற 'பஞ்சா' படத்தை இயக்க முடிவெடுத்தேன்.
அஜித் சாருடன் எனக்கு மிகவும் நெருக்கமான நட்பு இருந்தது. எனது இந்தச் சூழ்நிலையை அவரிடம் விளக்கியபோது, அவர் மிகுந்த பெருந்தன்மையோடு அதைப் புரிந்துகொண்டு எனது முடிவை ஏற்றுக்கொண்டார்.
'பில்லா' வெற்றிக்குப் பிறகு மீண்டும் அஜித் சாருடன் இணையும் வாய்ப்பை இழந்தது கஷ்டமாக இருந்தாலும், ஒரு இயக்குநராகக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதே சரியாக இருக்கும் என நம்பினேன்," எனப் பகிர்ந்திருக்கிறார்.
