அச்சிறுபாக்கம் தாலுகாவை உருவாக்கும் பரிந்துரை கிடப்பில்! 5 ஆண்டுகளாக பரிதவிக்கும் 30 கிராம மக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய தாலுகாவாக உள்ள மதுராந்தகத்தை இரண்டாக பிரித்து, அச்சிறுபாக்கத்தை தலைமையிடமாக கொண்டு புதிதாக தாலுகா அமைக்கக்கோரி, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு அனுப்பிய பரிந்துரை ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. துாசு கூட தட்டாமல் அப்படியே போடப்பட்டுள்ளதால், 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய ஏழு தாலுகாக்கள் உள்ளன. இதில், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்களில், அதிகமான கிராமங்கள் உள்ளன.
மதுராந்தகம் தாலுகாவில் உள்ள அனந்தமங்கலம் கிராமம், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா, விவசாய நிலங்களுக்கு பட்டா மற்றம், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு ஜாதி, இருப்பிடம், வருமான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, 50 கி.மீ., துாரம் உள்ள மதுராந்தகம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில், போக்குவரத்து வசதி குறைவாக உள்ளதால், பொதுமக்கள் காலையிலேயே மதுராந்தகம் தாலுகா அலுவகத்திற்கு வருகின்றனர். சிலர் இருசக்கர வாகனங்களில், வருகின்றனர்.
இங்கு, நீண்ட நேரம் காத்திருந்து, சான்றிதழ்கள், பட்டா மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பெற சிரமப்படுகின்றனர். அதேபோல், மேல்மருவத்துார், சோத்துப்பாக்கம், இரும்புலி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 25 கி.மீ., துாரம் உள்ள, செய்யூர் தாலுகாவிற்கு அனைத்து தேவைக்கும் சென்று வருகின்றனர். எனவே, அச்சிறுபாக்கத்தில் தாலுகா அலுவலகம் அமைந்தால், இப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைவர்.-
சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகில் மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம், தொழுப்பேடு ஆகிய பகுதிகளில், குடியிருப்புகள், தனியார் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதனால், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களை பிரித்து, அச்சிறுபாக்கத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அலுவலகம் ஏற்படுத்த வேண்டும் என, அரசிடம் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகம், தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தி.மு.க., ஆட்சியின்போது, மதுராந்தம் எம்.எல்.ஏ., அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்பதால், புதிய தாலுகா ஏற்படுத்துவதை, தவிர்த்தனர். இப்பிரச்னையை தீர்க்க, முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, சட்டசபை இடைத்தேர்தல் நடப்பதால், அரசியல் கட்சியினர் வேட்பாளர்கள், அச்சிறுப்பாக்கம் தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகா அலுவலகம் ஏற்படுத்தப்படும் என, பொதுமக்களுக்கு வாக்குறுதிகள் அளித்துள்ளனர். இதனால், புதிய தாலுகா அலுவலகம் ஏற்படுத்த, முதல்வர் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாவிற்கு, வருவாய்த்துறை தொடர்பான அனைத்து தேவைகளுக்கும் செல்ல வேண்டி உள்ளது. அலுவலகத்தில் அதிகாரிகள் இருந்தால், உடனடியாக தீர்வு கிடைக்கும். அதிகாரிகள் இல்லை என்றால் மீண்டும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், பொருள்விரையம், காலவிரையம் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, அச்சிறுப்பாக்கத்தில் தாலுகா அலுவலகம் ஏற்படுத்த வேண்டும். இ. ராஜேந்திரன், சமூக ஆர்வலர் வெங்கடேசபுரம் அச்சிறுபாக்கம்.