Crime, law and justice
பிஷப்கள் நியமனங்களில் பாகுபாடு நிலவுவதாக வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை: ரோமன் கத்தோலிக்க பிஷப்கள் நியமனங்களில் தீண்டாமை மற்றும் பாகுபாட்டை தடுக்க தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
ஸ்ரீவில்லிபுத்துார் அன்பரசன் தாக்கல் செய்த பொதுநல மனு: இந்தியாவில் ரோமன் கத்தோலிக்க (ஆர்.சி.,) கிறிஸ்தவர்களில் ஆதிதிராவிடர்கள் அதிகம் உள்ளனர். இப்பிரிவிலுள்ள உயர்வகுப்பினர்களால் ஆதிதிராவிடர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு சர்ச்களில் தனி இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. தனி கல்லறைகள் அமைக்கப்படுகின்றன. நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. சம வாய்ப்பு அளிப்பதில்லை.
தமிழகத்தில் சில இடங்களில் ஆதிதிராவிடர்கள் விலக்கி வைக்கப்பட்டதால், தங்களுக்கென தனி சர்ச்கள் வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்தியாவில் 170 பிஷப்களில் ஆதிதிராவிடர்கள் 11 பேர் மட்டுமே. தமிழகத்தில் 18 பிஷப்களில் ஆதிதிராவிடர் ஒருவர் மட்டுமே. பிஷப் நியமனங்களில் ஆதிதிராவிடர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்க பல அமைப்புகள் வலியுறுத்தின. பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
ரோமன் கத்தோலிக்க பிஷப்கள் நியமனங்களில் தீண்டாமை, பாகுபாட்டை தடுக்க மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை செயலர், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வு விசாரித்தது. தமிழக பிஷப் கவுன்சில் தலைவர் தரப்பு வழக்கறிஞர் சவரிமுத்து: பிஷப்களை நியமிப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எவ்வித பங்கும் இல்லை. மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையதல்ல. பிஷப் நியமனத்திற்கான பெயரை பரிந்துரை செய்ய வேண்டியது டில்லியிலுள்ள இந்தியாவிற்கான அப்போஸ்தலிக் நுன்சியோவின் பொறுப்பு. உலகம் முழுவதும் பிஷப்களை நியமிக்கும் அதிகாரம் போப் ஆண்டவருக்கே உள்ளது.
இவ்வாறு தெரிவித்தார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பிஷப் நியமனங்களில் மத்திய அல்லது மாநில அரசுகள் எவ்வித பங்கும் வகிப்பதற்கான எந்தவொரு விதியோ அல்லது சட்டப்பிரிவோ இல்லை என்பதை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஒப்புக்கொண்டார். மனுதாரருக்கு எவ்வித நிவாரணமும் வழங்க இயலாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.