எல் நினோ: உதகையில் செப்டம்பரிலேயே தொடங்கிய நீர் பனி.. காலநிலை மாற்றத்தால் உள்ளூர் மக்கள் அச்சம்!

எல் நினோவால் உதகையில் செப்டம்பரிலேயே நீர் பனி பொழிவு. வழக்கமான பனி காலநிலை முன்கூட்டியே தொடங்கியதால் மக்கள் அச்சம்.
"எல் நினோ"எதிரொலியால் உதகையில் காலநிலை மாற்றம் காரணமாக செப்டம்பர் மாதத்திலேயே நீர் பனி பொழிய தொடங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் நீர் பனி காலநிலை காணப்படும். அதைத்தொடர்ந்து ஜனவரி மாதத்தில் உரை பனியின் தாக்கம் உச்சத்தை தொடும். இந்த ஆண்டு பருவ மழை இல்லாததால் நீலகிரியில் வெயிலின் தாக்கம் காணப்பட்டு வருவதால் பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் தண்ணீர் குறைந்துள்ளது.
இந்த நிலையில் வழக்கமான பனி காலநிலை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நீர் பனி தாக்கம் அதிகமாக காணப்பட்டது. நகரில் குதிரை பந்தய மைதானம், எல்க்ஹில், படகு இல்லம், காந்தல் போன்ற பகுதிகளில் புல் மைதானங்களில் விழுந்த நீர் பனி முத்து முத்தாக காட்சியளித்தது. சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மழை பொழிந்தது போல் நீர் பனி காணப்பட்டது.
