Arts, culture, entertainment and media
மிஷன் ரங்கீலி மச்லி... அலங்கார மீன் வளர்ப்புக்கு மத்திய அரசின் மானியத் திட்டம்!

அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு வழிகாட்ட செல்போன் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
விவசாயிகள், பயிர்ச் சாகுபடியை மட்டும் சார்ந்தில்லாமல் மாற்று வழியில் வருமானம் பார்ப்பதற்கான ஒரு நல்வாய்ப்பை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. பிரதம மந்திரியின் மீன் வளத் திட்டத்தின் கீழ், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அலங்கார மீன் வளர்ப்புத் துறையை மேம்படுத்த, ‘மிஷன் ரங்கீலி மச்லி’ (Mission Rangeen Machhli -2031) என்ற பெயரில் சிறப்புத் துணைத் திட்டத்தை, கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி, இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், லட்சத்தீவில் துவக்கி வைத்துள்ளார்.
வீட்டின் அழகுக்காகவும், மன அமைதிக்காகவும் வளர்க்கப்படும் வண்ண மீன்களுக்கு (Ornamental Fish) உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சமீபகாலமாகச் சந்தை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்களும் மானியமும்!
இந்தத் திட்டத்தின் கீழ், சிறு தொழில் முதல் பெரிய அளவிலான குஞ்சு பொரிப்பகங்கள் வரை அமைப்பதற்கு அரசு வழிகாட்டுகிறது. இதற்கு மானியமும் வழங்கப்படுகிறது. பொதுப் பிரிவில் சிறு/குறு விவசாயிகள், பெண்கள், சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள் உள்ளிட் டோருக்கு மொத்தத் திட்ட மதிப்பீட்டில் 40% மானியம் வழங்கப்படுகிறது. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு மொத்தத் திட்ட மதிப்பீட்டில் 60% மானியம் வழங்கப் படுகிறது. மொத்தம் 3 லட்ச ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இந்தத் தொழிலைத் தொடங் கினால், பொதுப் பிரிவினருக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும் மானியமாகக் கிடைக்கும். வண்ண மீன் ரகங்கள் உற்பத்தி, குஞ்சு பொரிப்பகங்கள், வளர்ப்புத் தொட்டிகள் மற்றும் விற்பனை அங்காடிகள் அமைத்தல் ஆகியவற்றுக்கு மானியத் திட்டத்தைப் பயனாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
திட்ட அறிக்கை அவசியம்!
நீங்கள் தொடங்கப் போகும் வண்ண மீன்கள் வளர்ப்பு தொழில் குறித்த அறிமுகம் மற்றும் சுய விவரம், விண்ணப்பதாரரின் பெயர், முகவரிச் சான்று, ஆதார் அட்டை, பேன் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தக நகல், சாதிச் சான்றிதழ், திட்ட அறிக்கை மற்றும் நிலத்தின் விவரம், குத்தகை நிலமாக இருந்தால் 10 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்தப் பத்திரம் ஆகியவை தேவை.இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளர்கள் அரசு மானியம் பெற, மிகவும் முக்கியமானது, விரிவான திட்ட அறிக்கை.
மீன்வளத்துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்யத் திட்ட அறிக்கை தெளிவாக இருக்க வேண்டும். தொட்டிகளின் அளவு மற்றும் எண்ணிக்கை, நீர் ஆதாரம், நீர் வடிகட்டி (Filtration) வசதிகள், ஆக்ஸிஜன் மோட்டார்கள் (Aerators) மற்றும் மின்சாரக் கட்டமைப்பு குறித்த விவரங்களும் திட்ட அறிக்கை யில் இடம்பெற வேண்டும். தொட்டிக் கட்டுதல் அல்லது அவற்றை வாங்குவதற்கான செலவு, உபகரணங்கள் (வலைகள், மோட்டார்கள், விளக்குகள் ஆகியவை வாங்குவதற்கான செலவு, செயல்பாட்டுச் செலவு குறித்த விவரங்களும் அவசியம்.
தீவனம், மருந்துகள், பராமரிப்பு, மின்சாரக் கட்டணம் மற்றும் போக்குவரத்துச் செலவு ஆகியவற்றையும் ஓர் உத்தேசமாகத் திட்ட அறிக்கை யில் குறிப்பிட வேண்டும்.
ஆரம்பக்கட்ட நிதி ஆதாரங்கள், வரவு-செலவுத் திட்டம், மொத்தத் திட்ட மதிப்பீடு, உங்களின் சொந்த முதலீடு மற்றும் வங்கிக் கடன் பங்களிப்பு குறித்த விவரங்களும் திட்ட அறிக்கையில் இடம்பெற வேண்டும். மீன் குஞ்சுகளின் உற்பத்தி அளவு, விற்பனை செய்வதன் மூலம் எதிர்பார்க்கப்படும் வருமானம் மற்றும் நிகர லாபம் குறித்த விவரங்களும் அவசியம்.
விரிவான திட்ட அறிக்கையுடன், உங்கள் மாவட்ட மீன்வளத்துறை அலுவலகத்தை அணுகினால், அங்குள்ள அலுவலர், உங்களது திட்ட மதிப்பீட்டுக்கு ஏற்ப மாதிரிப் படிவங்களை வழங்குவார். தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் (NFDP Portal / PMMSY Official Portal) இணையதளத்திலும் நேரடியாகப் பதிவு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ் வண்ணமீன்கள் வளர்ப்புத் தொழில் துவங்க, ஏக்கர் கணக்கில் குளங்கள் தேவையில்லை. சுமார் 2 அல்லது 3 சென்ட் நிலத்தில் பிளாஸ்டிக் அல்லது சிமென்ட் தொட்டிகளிலேயே உற்பத்தி செய்யலாம். இதற்கு பராமரிப்பு செலவும் குறைவு.
வழக்கமான விவசாயப் பணிகளுடன் பகுதிநேரத் தொழிலாகவும் இதை மேற் கொள்ளலாம். உணவு மீன்களைவிட அலங்கார மீன்கள் எண்ணிக்கையின் அடிப் படையில் அதிக விலைக்கு விற்பனை யாகின்றன. சந்தை இணைப்பு (Market Linkage] திட்டத்தின் மூலம் உற்பத்தி, தரக் கட்டுப்பாடு, நேரடி விற்பனை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதிக்கு மத்திய அரசு வழிகாட்டுகிறது. மீன்வளத்துறை அலுவலர்கள் உங்கள் விரிவான திட்ட அறிக்கை மற்றும் நிலப்பரப்பை நேரில் ஆய்வு செய்தபின், திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பார்கள். அவர்கள் அளிக்கும் ஒப்புதல் கடிதத்தைக் கொண்டு நீங்கள் வங்கிக் கடனையும் பெற முடியும்.
ரங்கீலி மச்லி செயலி!
அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு வழிகாட்ட செல்போன் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர், ‘ரங்கீலி மச்லி’ செயலி. இந்தச் செயலி தமிழ், இந்தி உள்ளிட்ட எட்டு மொழிகளில் மீன் பராமரிப்பு மற்றும் நோய் மேலாண்மை குறித்த பயிற்சிகளை வழங்குவதுடன், அருகில் உள்ள மீன் கடைகள் மற்றும் வியாபாரிகள் குறித்த விவரங்களை வரைபடத்துடன் கண்டறியவும் உதவுகிறது. மேலும், மீன் வளர்ப்பாளர்கள் தங்களைப் பதிவேற்றம் செய்து நேரடியாகச் சந்தை வாய்ப்புகளையும் அரசு வழிகாட்டுதல்களையும் எளிதில் பெற இது பெருமளவில் துணைபுரிகிறது.
குறைந்த நிலத்தில் நிறைவான லாபம் தரும் இந்த வண்ண மீன் வளர்ப்புத் திட்டத்தைப் பயன்படுத்தி தமிழக விவசாயிகள் தங்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
