Politics
ஒற்றுமையை போதிக்கும் விநாயகர் சதுர்த்தி! விசர்ஜன ஊர்வலம் துவக்க விழாவில் பேச்சு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பல்வேறு அமைப்பினர் கடந்த, இரண்டு நாட்களாக பிரதிஷ்டை செய்த சிலைகளை விசர்ஜனம் செய்தனர்.
நேற்று ஹிந்து முன்னணி சார்பில் சிலைகள் விசர்ஜன ஊர்வலம், பல்லடம் ரோடு வீர சிவாஜி திடலில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ் வரவேற்றார். தெற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். கோட்ட செயலாளர்கள் அசோக்குமார், பாலச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் அண்ணாதுரை பேசுகையில், ‘‘ஹிந்து முனன்ணி அமைப்பு, ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் துவங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் இருப்போம்,’’ என்றார்.
கோவை கோட்ட பொதுச்செயலாளர் பாபா கிருஷ்ணன் பேசுகையில், ‘‘ஹிந்து முன்னணி, தேச, தெய்வ பக்தியை போதிக்கிறது. இது ஆன்மிக பூமியாகும். தமிழர் பண்பாடும், சனாதன ஹிந்து தர்மமும் ஒன்றே என்ற தலைப்பில் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
சனாதனம் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர் பண்பாடும், சனாதன ஹிந்து தர்மமும் ஒன்றே ஆகும்,’’ என்றார்.
மாவட்ட செயலாளர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் துவங்கியது. அதில், கடவுள் வேடமணிந்து வந்த கலைஞர்கள் விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக சென்றனர்.
நேற்று மொத்தம், 64 சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டும், அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. போலீசார், அதிவிரைவுப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.