லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதல் முறையாக கங்கை ஆரத்தி கோலாகலம்

லண்டன்: லண்டன் தேம்ஸ் நதிக்கரையில், வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் முதன்முறையாக 'கங்கை ஆரத்தி' திருவிழா கோலாகலமாக நடந்தது. விழாவைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் நதிக்கரையில் திரண்டனர்.
சின்மயா மிஷன் அமைப்பின் 75வது ஆண்டு உலகளாவிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்த திருவிழா நடந்தது.
இதையொட்டி, லண்டனில் ஆண்டுதோறும் நடக்கும் 'டோட்டலி தேம்ஸ்' திருவிழாவுடன் இணைந்து 'தேம்ஸ் நதியில் கங்கை ஆரத்தி' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவில் கங்கை நதிக்கரையில் நடக்கும் ஆரத்தி விழா, உலகப்புகழ் பெற்றது; பக்திப் பரவசத்தை ஏற்படுத்தக்கூடியது.
அத்தகைய ஆன்மிகச் சூழலை லண்டனில் ஏற்படுத்தும் நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டது.
சின்மயா மிஷன் லண்டன் கிளையின் ஆசிரியர் பிரம்மச்சாரிணி ஸ்ரீப்ரியா சைதன்யா கூறுகையில், 'பல தலைமுறைகளாக, மக்கள் கங்கை நதிக்கரையில் ஒன்று கூடி, நதிக்கும், இயற்கைக்கும் மற்றும் உயிர்களைத் தாங்கி நிற்கும் அனைத்திற்கும் நன்றி செலுத்தும் விதமாக ஆரத்தி அர்ப்பணித்து வருகின்றனர். அதே போன்ற நிகழ்ச்சி தான் தேம்ஸ் நதிக்கரையில் நடத்தப்பட்டது,' என்று குறிப்பிட்டார்.
'இந்த ஆன்மிக நிகழ்வு லண்டன் வாழ் இந்தியர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.