வீட்டின் மொட்டை மாடியில் நிறுத்தப்பட்ட கார்; திருடர்களுக்கு வந்த சவால்
திருடர்களுக்கு வந்த சவால்பீ ஹார் மாநிலம் கோபால்கஞ்சை சேர்ந்த மனோஜ், வேலைக்காக வெளிநாடு சென்று

பீ ஹார் மாநிலம் கோபால்கஞ்சை சேர்ந்த மனோஜ், வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். திருட்டு பயம் மிகுந்த ஊரில், வீட்டு வாசலில் நிறுத்தியிருக்கும் ஸ்கார்பியோ வாகனத்தை, எப்படி பாதுகாப்பது என்ற பலத்த யோசனைக்கு பிறகு, குடும்பத்தினர் எடுத்த அந்த முடிவு, குபீர் சிரிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.
பெரிய மூன்றடுக்கு கிரேனை வரவழைத்த அவர்கள், அலேக் ஆக ஸ்கார்பியோவை துாக்கி, தங்கள் இரண்டு மாடி வீட்டின் மொட்டை மாடியில் நிறுத்தி விட்டனர். அவ்வளவுதான், தீர்ந்தது கவலை. கிரேனில் காரை துாக்கி மொட்டை மாடியில் நிறுத்தும் வீடியோ, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கே. எப்.சி., நிறுவனத்தின் கிரேட்டர் நொய்டா மேற்கு கிளையில் வாங்கிய, பிரைடு சிக்கனில் புழு இருந்ததாக, எக்ஸ் தளத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வீடியோவுடன் வெளியிட்ட பதிவு டிரெண்டிங் ஆனது. 'இது மிகவும் மோசம். உங்கள் பிரைடு சிக்கனில் புழு இருந்தது. இது, ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று' என்று அவர் கூறியிருந்தார்.
இதைக்கண்ட நெட்டிசன்கள், கே.எப்.சி.,யை வறுத்தெடுத்தனர். வேறு வழியில்லாத அந்த நிறுவனம், வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
அழுது புரண்ட 'அட்மின்'
மெ க்டொனால்டு இந்திய பிரிவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கில் இன்று வெளியான பதிவுகள், நெட்டிசன்களை கவனிக்க வைத்தன. 'நான் மெக்டொனால்டு நிறுவனத்தில் பயிற்சி ஊழியராக வேலை பார்க்கிறேன். என் பாஸ், பல மாதங்களாக எனக்கு சம்பளம் தரவில்லை. வேறு வழியற்ற நிலையில், நான் வேறு இரு வேலைகளையும் பார்க்க வேண்டியுள்ளது. எனக்கு 2025 டிசம்பர் முதல் சம்பளம் தரவில்லை' என்று அதில் இருந்தது.
இதேபோன்று அடுத்தடுத்து வேறு சில பதிவுகளும் வந்தன. ஆனால், சிறிது நேரத்தில் அவை அனைத்தும் நீக்கப்பட்டன. கடைசியாக வந்த பதிவில், 'மெக்டொனால்டு அட்மின் இப்போது; நம் உண்மையான பதிவுகள் மட்டும் இப்படி வைரல் ஆகியிருந்தால்...' என்று ஒரு நாய் கண்ணீர் வடிப்பது போன்ற படம் இருந்தது. அதனுடன் 'போலிச்செய்தி' என்ற ஹேஷ்டேக் இடம் பெற்றிருந்தது. அதாவது, முந்தைய பதிவுகள் போலியானவை என்று, அந்த நிறுவனம் சொல்லாமல் சொல்லியிருக்கிறது.
ஊழியருக்கு உரிய சம்பளத்தை வழங்கும்படியும், எக்ஸ் கணக்கை யாரோ ஹேக் செய்து பதிவு வெளியிட்டதாகவும், கம்பெனியே திட்டமிட்டு குறும்பு செய்கின்றனர் என்றும், மாறி மாறி வெளியான பதிவுகள், இந்த விவகாரத்தை இணையத்தில் பரபரக்கச் செய்தன.
'ட க்கர்' என்ற கோல்டன் ரெட்ரீவர் வகை நாய், இணையத்தில் மிகவும் பிரபலம். அமெரிக்காவின் மிச்சிகனை சேர்ந்த கோர்ட்னீ என்ற பெண் இந்த நாயை வளர்த்தார். அவர் வெளியிட்ட 'டக்கர்' படங்களும், வீடியோக்களும், நெட்டிசன்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டு வந்தன. சில நாட்களுக்கு முன், டக்கருக்கு புற்றுநோய் என்றும், சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், கோர்ட்னீ தெரிவித்திருந்தார். இப்போது 'டக்கர்' இறந்து விட்டதாக கோர்ட்னீ கண்ணீருடன் தெரிவித்துள்ளதை கண்ட நெட்டிசன்கள், அவருக்கு ஆறுதல் கூறி, டக்கருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பெங்களூரு மாநகரின் போக்குவரத்து நெரிசல் உலக பிரசித்தம். அதில், எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து ஒயிட்பீல்டு வரை, 30 கி.மீ., ஆட்டோவில் பயணித்தார், நீ யாதவ் என்ற பெண்மணி. தான் புறப்பட்டு மூன்று மணி நேரம் ஆகி விட்டதாகவும், இன்னும் இடத்தை சென்றடையவில்லை என்றும், அவர் புலம்பிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.
'இவைதான் பிரதான சாலைகள், போக்குவரத்து நெரிசலை பாருங்கள், இந்தப்பயணம் முடிவடைவதே இல்லை, பெங்களூரில் சாலைகளே இல்லை. மக்கள் எப்படித்தான் வீட்டை விட்டு தைரியமாக வெளியே வருகின்றனர் என்றே எனக்குத் தெரியவில்லை' என்ற அவரது வீடியோவை பார்த்து, நெட்டிசன்கள் தங்கள் அனுபவத்தை கொட்டிக் குமுறி வருகின்றனர்.