திராவிட அரசியலில் எம்.ஜி.ஆர். எழுச்சி! டைரக்டர் -ரைட்டர் -வி.சி.குகநாதன் (28)

(28) ஜெயலலிதாவா? பாக்யராஜா?
பெங்களூரிலிருந்து, உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்காக பாக்யராஜ் அவர்களுடன் தமிழ்நாடு எல்லையிலுள்ள இடங்களிலிருந்து ஆரம்பித்தோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதன் கழகப் பொறுப்பாளர், பாக்யராஜை வரவேற்று நம் வண்டியில் ஏறி முன்சீட்டில் அமர்ந்துகொள்வார். பின்னால் பாக்யராஜ், நான், ஹேம்நாக் பாபு. சேலத்தில் பூலாவாரி முருகேசன் சகோதரி வரவேற்றார். பிற்காலத்தில் அமைச்சராக வந்தவர். அவர் ஏற்பாடு செய்த இடங்களில் ஏகப்பட்ட கூட்டம். பாக்யராஜ் மேடைக்கு வருமுன் நான் மேடைக்குப் போவேன். ஏகப்பட்ட கூட்டமாக இருக்கும், பலபேரை கீழே இறக்கிவிடுவேன். அதன்பின்னரே பாக்யராஜ் மேடைக்கு வருவார். அவர் மிக சாமர்த்தியமாக குட்டிக்கதைகள் சொல்லி, நகைச்சுவை கலந்து பேச ஆரம்பிப் பார். எம்.ஜி.ஆர். குணநலன்.. அவரின் அரசியல் பணி குறித்து மிக்க சுவாரஸ்யமாகப் பேசுவார். எல்லா இடத்திலும் வியக்கும் அளவு கூட்டம் கூடியது. இதைப் பார்த்த போது வாரிசுப் போட்டி கண்டிப்பாக வரும் என நான் எதிர் பார்த்தேன். ஜெயலலிதாவா? பாக்யராஜா? என்று என் மனதில் அன்று தோன்றியது.
முதல்நாள் மதியம் இராமலிங்கம் வீட்டில் சாப்பாடு. பயணம் தொடர்ந்தது. போகப்போக கூட்டம் அதிகமானது. பாக்யராஜ் பேச்சிலும் வேகமும் விவேகமும் கூடியது. திருவண்ணா மலையில் ப.உ.சண்முகம் சார் வீட்டில் சாப்பாடு. போன இடமெல்லாம் பாக்யராஜைப் பார்க்க பெண்கள் கூட்டம் அதிகமானது. அடுத்து வேலூர் தொகுதிக்குள் நுழைந்ததும் ஏ.சி.சண்முகம் சார் வந்து காரில் ஏறினார். பல கூட்டங்களை பல ஊர்களில் முடித்துக்கொண்டு வேலூரில் மாபெரும் கூட்டம். பத்து மணிக்கு மேல்தான் அங்கு வரமுடிந்தது. அங்கும் லட்சக் கணக்கானோர் கலையாமல் காந்திருந்தனர். அங்கேயும் பாக்யராஜ் விளாசித் தள்ளினார். இரவோடு இரவாக சென்னை வந்துசேர்ந்தோம்.
மறுநாள் காலையே மக்கள் திலகத்தை சந்திக்கப் போனேன், நடந்தவற்றைச் சொல்வதற்காக. நான் தொடங்குமுன்னரே எம்.ஜி.ஆர்., தானே நேரில் பார்த்ததுபோல் எல்லா விஷயங்களையும் வரிசையாக சொல்லிவிட்டு "இதுதானே நீ சொல்ல வந்தது?' எனக் கேட்டார். அந்த நாட்களில் லைவ் டெலிகாஸ்ட் கிடையாது. ஆனால், இவர் எப்படித்தான் தெரிந்துகொள்வாரோ? பெரிய அதிசயம்தான்.
எம்.ஜி.ஆர். படங்களில் வரும் சண்டைக் காட்சிகளுக்கும், மற்ற நடிகர்கள் நடிக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் மிகப்பெரியது. ஏனைய நடிகர்களின் சண்டைக் காட்சிகளில் வன்மமும் கோபமும் அதிகமாக இருக்கும்.
எம்.ஜி.ஆரின் எல்லா சண்டைக் காட்சிகளிலும் தவறு செய்தவனை திருத்துவதற்கான சண்டையாக இருக்கும். எதிரியின் உடலை சிதைக்கும் சண்டையாக இருக்காது. அதுமட்டுமல்ல எதிரி உயிர்போகும் நிலை வந்தால்.... எம்.ஜி.ஆர். அவனை காப்பாற்றுவார். சண்டையிடும்போது கூட எதிரியைப் பார்த்து ஏளனச் சிரிப்போடு அடிப்பார். எந்தப் படத்திலும் அவர் வெறித்தனமாக எதிரியைத் தாக்கமாட்டார். அவர் சண்டைகள் ஒருபோதும் வன்முறையாக இருந்ததில்லை. அப்படியொரு கண்ணியத்தை சண்டைக் காட்சிகளில் கூட கடைபிடித்தவர் எம்.ஜி.ஆர். சமுதாயத்தை சீரழிக்கும் எந்தக் காரியத்தையும் அவர் திரைப்படங்களில் செய்யவேமாட்டார்.
"ஒளி விளக்கு' எம்.ஜி.ஆரின் நூறாவது படம். இது ஒரு இந்திப் படத்தின் ரீ-மேக். இதில் இவர் குடிப்பதுபோல் காட்சிகள் உண்டு. அதைத் தவிர்த்தால் படம் தோற்றுவிடும். ஆகவே ஒரு பாட்டை சேர்த்து குடிப்பது தவறு என பிரச் சாரம் செய்தார். "தைரியமாகச் சொல் நீ மனி தன்தானா?' என்ற அந்தப் பாடல் குடிப் பவர்கள் உணரும் வண்ணம் அழகாக படமாக்கப் பட்டிருக்கும். தீமை பயக்கும் விஷயங்கள் எம்.ஜி. ஆர். படங்களில் இருக்காது. இதுவும் எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய ஒரு எழுச்சிதான்.
இப்படி எல்லாவிதத்திலும் எழுச்சி நாயகனாக ஒரு எடுத்துக் காட்டாக வாழ்ந்ததினால்தான் அவர் இறந்து நாற்பது வருடங்களாகியும் அவர் பேசப்படுகிறார். இன்றும் சட்டசபையில் சபாநாயகர் அவர் பற்றிப் பேசுகிறார்.
சட்டசபை என்றவுடன் எனக்கு இன்னொரு அருமையான நிகழ்வு நினைவுக்கு வருகிறது. கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆர். சபைக்கு முதலில் வந்து அமர்ந்துவிடுவார். கலைஞர் தாமதமாக அவருக்குப் பின் வருவார். உடனே எம்.ஜி.ஆர். எழுந்து கலைஞருக்கு வணக்கம் சொல்வார்.
முதலில் இதைப்பற்றி அதிகமாக சிந்திக்காத கலைஞர், திடீரென இதைக் கவனத்தில் எடுத்து, "அவர் முதல்வர், பழைய நண்பர், என்னைவிட வயதில் மூத்தவர், தினமும் முதலில் வந்துவிடுகிறார், தவறாமல் தினமும் எழுந்து வணக்கம் வைக்க தவறுவதேயில்லை' என்பதை கவனத்தில் கொண்டு தன் வழக்கத்தை மாற்றினார் கலைஞர்.
தினமும் எம்.ஜி.ஆர். வருவதற்கு முன்னால் கலைஞர் வந்து அமர்ந்துவிடுவார். எம்.ஜி.ஆர். சபைக்குள் வரும் போது கலைஞர் எழுந்து வணக்கம் சொல்வார். இதுதான் கலைஞரின் மாண்பு.
"மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' (அப்போது தேர்தல் சமயம்) எம்.ஜி.ஆர். முடிக்க வேண்டிய படம். அதில் அவர் இரு கைகளில் வாளேந்தி உக்கிரமாக சண்டைபோடும் காட்சி. சுற்றிலும் எதிரிகள், அவர் சுழன்று வந்து இரு கால் முட்டியிலும் நிலத்தில் சுத்திச் சுத்தி சண்டை போடவேண்டும்.
இப்படியொரு சண்டைக் காட்சியை "மருதநாட்டு இளவரசி' படத்தில் செய்திருப்பார். அப்போ இளவயசு, தற்போது ஐம்பத்து எட்டு வயசு. அதனால் டூப் போட்டு எடுத்துவிடலாம் என அனைவரும் சொன்னார்கள். எம்.ஜி.ஆர். ஒப்புக்கொள்ளவில்லை. அதிலும் அது சற்று மணற்பாங்கான இடம். முழங்கால்களில் நின்று சுழல்வது கடினம். எம்.ஜி.ஆர். எதைப்பற்றியும் கவலைப்படவே யில்லை. எதிர்பார்த்ததைவிட மிக வேகமாகவும், ஸ்டைலாகவும் அந்தக் காட்சியில் நடித்தார். ஷாட் முடிந்ததும் நின்றிருந்த அத்தனைபேரும் தங்களை மறந்து கைதட்டினார்கள். எம்.ஜி.ஆரின் பழக்க வழக்கங்கள், உணவு முறை, தவறாத தேகப்பயிற்சி இவற்றைப் பார்த்தவன் நான். அதனால் அவர் நிச்சயமாக நூறு வயதுக்கு மேல் வாழ்வார் என எண்ணியிருந்தேன். அவர் எழுபதில் போய்விடுவார் என கனவில் கூட நினைக்கவில்லை.
எல்லோருக்கும் எம்.ஜி.ஆரை பிடிக்கும். ஆனால் அவர் மிகச் சிலரோடுதான் ஆத்மார்த்தமாகப் பழகுவார், மனம்விட்டுப் பேசுவார். அவரிடமிருந்த ஒரு அற்புதமான குணம்... நன்றி மறவாமை. சின்னவயதில் தனக்கு உதவியவர்களை மறக்கவேமாட்டார். ஏதோ ஒரு காலகட்டத்துக்காக காத்திருந்து கைமாறு செய்வார். வெளியே அதுபற்றிப் பேசவும்மாட்டார்.
இவரது குணாதிசயங்கள் பற்றி நடிகர் நம்பியார் அதிகமாகத் தெரிந்து வைத்திருந்தார். எம்.ஜி.ஆரைப் பற்றி பல விஷயங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார். ஒரு தடவை ஒரு சண்டைக் காட்சியின்போது நம்பியார் கையிலிருந்த வாள் கை நழுவி எம்.ஜி.ஆர். கண்ணுக்கு கீழே கீறிவிட... ரத்தம் வந்திருக்கிறது. உடனே ஐஸ்கட்டி வரவழைத்து... ரத்தத்தை உறைய வைத்துவிட்டு, சண்டைக் காட்சியை முடித்துவிட்டுத்தான் டாக்டரிடம் போனாராம் எம்.ஜி.ஆர்.
(வரும் இதழில்...)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)