Economy, business and finance
சி.சி.ஐ., செயல்முறையில் மறுசீரமைப்பு எதிர்பார்ப்பு! தொழில் துறையினர் வலியுறுத்தல்
திருப்பூர்:இந்திய பருத்திக்கழகத்தின் செயல்முறைகளை மறுசீரமைப்பு செய்து, நுாற்பாலைகளுக்கு மட்டுமே பஞ்சு விற்பனை செய்ய வேண்டுமென கட்டாயப்படுத்தினால், நாடு முழுவதும் பஞ்சு - நுால் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என, நுால் வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில், உள்நாட்டு தேவைக்கு அதிகமாகவே பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது; பஞ்சும் உற்பத்தியாகிறது. மத்திய அரசு, பருத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன், இந்திய பருத்திக்கழகத்தை அமைத்துள்ளது. அதேநேரத்தில், உள்நாட்டு பஞ்சு தேவைகளை பூர்த்தி செய்வதும் அதன் தலையாய கடமையாக உள்ளது.
தலைகீழ் மாற்றம் ஏன்?
நாட்டின் பொருளாதாரத்தில் ஜவுளித்தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், உள்நாட்டு ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு தேவையான பஞ்சு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். போட்டி நாடுகளை காட்டிலும், பருத்தி அதிகம் விளையும் நமது நாட்டில், அடிக்கடி பஞ்சு பற்றாக்குறையும், செயற்கை தட்டுப்பாடும் ஏற்படுவது, ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலிலும் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.
சில பெரிய நிறுவனங்கள், பருத்தி பஞ்சை வாங்கி பதுக்கி வைத்து, பெரிய லாபம் ஈட்டுவதால், ஒட்டுமொத்த ஜவுளித்துறையும் பாதிக்கப்படுகிறது. பஞ்சு விலை உயர்வால் நுால் விலையும் உயர்த்தப்படுவதால், சர்வதேச சந்தைகளில் இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டித்திறனும் குறையும் அபாயம் உள்ளது.
திரிசங்கு நிலையில்...
கடந்த சில மாதங்களாக, பஞ்சு விலை உயர்வால் நுாற்பாலைகளும், நுால் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவருக்கும் இடையே, நுால் வியாபாரிகளும் திரிசங்கு நிலையில் தத்தளித்து வருகின்றனர். பஞ்சு விலையும், நுால் விலையும் வாராவாரம் மாற்றம் அடைவதால், நுால் வியாபாரிகள் கடும் நஷ்டத்தை சந்திப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு நுால் வியாபாரிகள் சங்கங்கள் கூட்டமைப்பு துணைத் தலைவர் முருகேசன் கூறியதாவது:
பஞ்சு விலை உயர்வால் நுாற்பாலைகளும், நுால் விலை உயர்வால் உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல், இடையில் உள்ள நுால் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்திய பருத்திக்கழகத்தின் செயல்முறைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பஞ்சை, நுாற்பாலைகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பஞ்சை பதுக்கி வைக்க இடமளிக்கக்கூடாது.
சி.சி.ஐ. இருப்பு வைத்துள்ள பஞ்சுக்கு அதிக விலை நிர்ணயம் செய்யாமல், கொள்முதல் விலையைவிட குறைந்த அளவு மட்டும் உயர்த்தி விற்பனை செய்ய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே பஞ்சு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்தால், நுால் விலையும் நிலையாக இருக்கும். எனவே, பஞ்சு இறக்குமதிக்கான வரிச்சலுகையை, மேலும் ஆறு மாதங்களுக்கு கட்டாயம் நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.