Arts, culture, entertainment and media
”அந்த மாணவிக்கு ஆளுக்கொரு கவளம் சோறு கொடுங்கள்” - மாணவர்களிடம் வைரமுத்து உருக்கம்

பள்ளி மாணவர்கள் 50 ஆயிரம் பேர், ஒரே நேரத்தில் திருக்குறள் ஒப்புவிக்கும் திருக்குறள் மாநாடு நேற்று சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். அப்போது மாணவர்களுக்கு திருக்குறளின் அவசியம் குறித்து, அதன் பயன்பாடு குறித்தும் எடுத்துரைத்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், ”50ஆயிரம் பள்ளி மாணவர்கள் நேரிலும், இணையத்திலும் கலந்துகொண்டு திருக்குறள் ஒப்புவித்த திருக்குறள் மாநாட்டைத் தொடங்கி வைத்தேன். சைதன்யா பள்ளிகள் நிகழ்த்திய இந்தத் திருக்குறள் மாநாடு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு லண்டன் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துவிட்டது” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும், அதில் “கடல்போல் திரண்டிருக்கும் மாணவக் கண்மணிகளே! நேற்று பிரிக்ஸ் மாநாட்டுக்கு வந்திருந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு பரிசு வழங்கினார். அது கோலார் தங்கமோ! கோகினூர் வைரமோ! மாணிக்கப் பேழையோ! மரகத மகுடமோ அல்ல!
ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளைத்தான் அவர் பரிசாக வழங்கினார். பிரதமருக்குத் தெரியும் இந்தியாவின் பெருஞ்செல்வம் திருக்குறள் தான் என்று. நீங்கள் திருக்குறளைப் பள்ளிப் பாடமாக அல்லாமல் வாழ்க்கைப் பாடமாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அம்மா, அப்பா சண்டையில் கடுமொழி பேசினால் ‘இனிய உளவாக இன்னாத கூறல்’ என்ற குறள் சொல்லித் திருத்துங்கள். ஒரு மாணவன் உங்கள் பென்சிலைத் திருடிவிட்டால் ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்’ என்ற குறள்சொல்லி ஒருமுறை மன்னித்துவிடுங்கள்.
மதிய உணவு வேளையில் ஒரு மாணவி சோறுகொண்டு வரவில்லையென்றால் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற குறளைச் சொல்லி ஆளுக்கொரு கவளம் அள்ளிக்கொடுங்கள். திருக்குறள் ஒவ்வொரு நாளும் பயன்படும் உயர்ந்த வாழ்க்கை நூல் பிறமொழி கற்பது பிறகு. தாய்மொழிதான் முதலில்! தாய்மொழி கண்போன்றது. பிறமொழி கண்ணாடி போன்றது. கண் இல்லாமல் கண்ணாடியால் ஏதுபயன்? ஒரு குறள் சமுதாயம் எழுக. குறள் குழந்தைகள் வாழ்க!” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)