வசப்படும்! ‘ஜென்ஸி’க்களுக்கு பின்னலாடை நகரம் காத்திருக்கும் எண்ணற்ற வாய்ப்புகள்
திருப்பூர், செப். 6– திருப்பூர் என்றாலே பின்னலாடை ஏற்றுமதியும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் தான்

திருப்பூர் என்றாலே பின்னலாடை ஏற்றுமதியும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் தான் நினைவுக்கு வருவர். ஆனால், அந்த நிறுவனங்களின் பின்னணியில் நிர்வாகம், கணக்கு, மனிதவளம், தொழில்நுட்பம் என பல்லாயிரக்கணக்கான அலுவலர்களும் இயங்கி வருகின்றனர்.
படித்து முடித்த இளைஞர்கள் பலர் அரசு வேலை அல்லது சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் ‘ஐ.டி.,’ வேலை என கனவு காண்கின்றனர். ஆனால், ‘டாலர் சிட்டி’ திருப்பூரிலேயே நல்ல சம்பளத்துடன், நிரந்தரமான அலுவலர் மற்றும் அதிகாரி நிலை பணிகள் ஏராளமாக உள்ளன.
சிறிது காலம் சிரமப்பட்டு, தொழிலின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் என, மனிதவளத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பின்னலாடை நிறுவனங்களில் மனிதவளம், நிர்வாகம், கணக்கு, சரக்கு போக்குவரத்து, ஆவண பராமரிப்பு, வங்கி பணிகள், ஜி.எஸ்.டி., வருமானவரி கணக்குகள், ‘பேட்டர்ன்’ தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
புதிதாக பணிக்கு வருவோர், உடனடியாக உயர்ந்த பதவியை எதிர்பார்க்காமல், சில ஆண்டுகள் பொறுமையாக உழைத்து அனுபவம் பெற வேண்டும். ஐந்து ஆண்டுகள் வரை பணியில் கற்று தேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன.
இங்கும் ‘ஐ.டி.,’ இருக்கு!
சுரேஷ் பாபு, தலைவர், டேலண்டட் எக்ஸ்போர்ட் ஸ்டாப் அசோசியேஷன் (டீசா), திருப்பூர்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பட்டதாரிகள், இன்ஜினியர்கள் திருப்பூரை தேடி வருகின்றனர். ‘ஐ.டி.,’ துறையினருக்கும் இங்கு அதுசார்ந்த வேலைவாய்ப்புகள் உள்ளன; சில பணிகளில் பிற நகரங்களை விட கூடுதல் சம்பளமும் கிடைக்கிறது.
பின்னலாடைத் துறையில் அனுபவம் இல்லாமல் வருபவர்கள், சில ஆண்டுகள் பொறுமையாக இருந்து அனைத்து பணிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கான தேவை அதிகரிக்கும்.
தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதைப் போல, நிர்வாகம், அக்கவுண்ட்ஸ், ‘பேட்டர்ன்’ உள்ளிட்ட அலுவலகப் பணிகளுக்கும் பயிற்சி அளிக்கும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்.